கார்கில் தியாகிகளுக்கான வீடு தொடர்பான சர்ச்சை-சவானிடம் இன்று பிரணாப் விசாரணை
மும்பையில் கார்கில் போர் வீரர்களுக்க கட்டப்பட்ட ஆதர்ஷ் சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்பில் அசோக் சவானின் மாமியார் உள்பட 3 உறவினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், ராணுவ தளபதிகள் ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக தனியாக் தொலைக்காட்சி, காங்கிரஸ் செய்த ஊழல் குறித்து அம்பலப்படுத்தி செய்தி வெளியிட்டது. இதையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அசோக் சவான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் கொடுத்தார்.
காங்கிரஸ் கட்சியின் பெயரைக் கெடுக்கும் இந்த சர்ச்சையைத் தொடர்ந்து தர்மசங்கடமான சோனியா காந்தி இதுகுறித்து விசாரித்து அறிக்கை தருமாறு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
இந்தநிலையில் இன்று இரவு பிரணாப் முகர்ஜியை சந்திக்கவுள்ளார் அசோக் சவான். அப்போது தனது தரப்பு விளக்கத்தை அவர் அளிக்கிறார்.
முன்னதாக நேற்று மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, இந்த விவகாரம் குறித்து இப்போதைக்கு எனக்கு முழுமையாக எதுவும் தெரியவில்லை. டெல்லி திரும்பியதும் அதுகுறித்த விவரங்களை அறியவுள்ளேன்.
பின்னர் அந்தோணியுடன் இணைந்து அறிக்கை தயாரித்து காங்கிரஸ் தலைவரிடம் அளிப்பேன் என்றார்.
முன்னதாக தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள சவான் சோனியா காந்தியை சந்தித்து ஒரு மணி நேரம் தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.