காமன்வெல்த் போட்டியால் கிடைக்கும் வருவாய் ரூ. 600 கோடி மட்டுமே
ஸ்பான்சர் தருவதாக கூறிய பலரும் கடைசி நேரத்தில் விலகிக் கொண்டது, டிக்கெட் விற்பனையில் ஏற்பட்ட மந்தம், பல்வேறு குளறுபடிகள் ஆகியவையே இந்த வருவாய்க் குறைவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்காக போட்டி ஒருங்கிணைப்புக் குழுவுக்கு மத்திய அரசு ரூ. 1820 கோடியை தூக்கிக் கொடுத்தது. ஆனால் எதிர்பார்த்த வருவாய் மகா மோசமாக உள்ளது. செலவிட்ட பணத்தில் பாதி கூட திரும்ப வராத நிலை ஏற்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து போட்டி ஒருங்கிணப்புக் குழு அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில்வே உள்பட பல ஸ்பான்சர்கள் தாங்கள் தருவதாக கூறிய நிதியை இதுவரை தரவில்லை. இவர்கள் சொன்னபடி விரைவில் தங்களது பணத்தைத் தருவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், டிவி உரிமை மூலம் ரூ. 215 கோடியும், ஸ்பான்சர்ஷிப்கள் மூலமாக ரூ. 350 கோடி உள்பட மொத்தம் 600 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
ரயில்வே போட்டிக்காக ரூ. 100 கோடி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இதுவரை ஒரு பைசாவைக் கூட அது தரவில்லையாம்.