பீகார் 4வது கட்ட வாக்குப் பதிவில் மாவோயிஸ்டுகள் தாக்குதலால் பதட்டம்
பாட்னா: பீகாரில் இன்று 4வது கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. இதை சீர்குலைக்கும் வகையில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர் மாவோயிஸ்ட் நக்சலைட்கள்.
பேதியா வனப்பகுதியில் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அதேபோல தனாபூர் பகுதியில், நான்கு குண்டுகள் வெடித்தன.
இன்று காலை 42 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வரலாறு காணாத பாதுகாப்புக்கு மத்தியில் இந்தத் தேர்தல் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளனர் மாவோயிஸ்டுகள். இதுகுறித்து டிஜிபி நீல்மணி கூறுகையில், பேதியா வனப்பகுதியில், சகாய் -ஜமுய் மெயின் ரோட்டில் ஒரு பாலத்திற்கு அருகே குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை.
உடனடியாக அங்கு எல்லைப் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் விரைந்தனர். ஆனால் அதற்குள் மாவோயிஸ்டுகள் தப்பி ஓடி விட்டனர்.
அதேபோல தனாபூரில் இரு வாக்குச் சாவடிகளுக்கு அருகே ஒரு மர்ம நபர் நான்கு குண்டுகளை வெடிக்கச் செய்தார். அதிலும் யாரும் காயமடையவில்லை என்றார்.