For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் கேட்ட கேள்விக்கு ஜெ. பதில் எங்கே?-மு.க.ஸ்டாலின் கேள்வி

Google Oneindia Tamil News

Stalin
திருச்சி: கலைஞர் வீட்டு வசதித் திட்டம் தொடர்பாக நான் கேள்வி கேட்டு ஒரு வாரமாகி விட்டது. இன்னும் அதற்குப் பதில் அளிக்காமல் இருப்பது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கேட்டுள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திருச்சியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசுகையில்,

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் நடந்த நிகழ்ச்சிகளில் இதுவரை 94 மணி நேரம் நின்று கொண்டே மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல் நிதி வழங்கி இருக்கிறேன். இன்னும் 2 மணி நேரம் நின்றால் மொத்தமாக 4 நாட்கள் ஆகி விடும்.

நிலக்கோட்டையில் நடந்த சுழல் நிதி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்த ஞானதேசிகன் ஒரு கருத்தை சொன்னார். நீங்கள் எப்படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறீர்கள்? எப்படி இவ்வளவு நேரம் நின்று கொண்டே சுழல் நிதி வழங்குகிறீர்கள்? உங்களுக்கு களைப்பு, சோர்வு ஏற்படாதா? என்று கேட்டார்.

மக்கள் நம்மை மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் அணுகி வருவதால், இந்த அரசு மீது நம்பிக்கை வைத்து இருப்பதால் அந்த மகிழ்ச்சியை கண்டதும் களைப்பு, சோர்வை எல்லாம் மறந்து விடுகிறோம். வேறு எந்த மந்திரமும் இல்லை தந்திரமும் இல்லை.

ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இந்த மூன்றும் தான் முக்கியமானதாகும். உணவை பொறுத்தவரை ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்குகிறோம். உடையை பொறுத்தவரை விழாக்காலங்களில் வழங்குகிறோம். இருப்பிடத்தை பொறுத்தவரை மத்திய அரசின் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் தான் முன்னணியில் உள்ளது.

இவை அனைத்தையும் தாண்டி கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் குடிசைகளே இருக்க கூடாது என்பதற்காக 21 லட்சம் குடிசைகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 21 லட்சம் குடிசை வீடுகளும் 6 ஆண்டு காலத்தில் காங்கிரீட் வீடுகளாக மாற்றபட்டு விடும்.

இந்த ஆண்டு மட்டும் 3 லட்சம் காங்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட இருக்கிறது. இந்த வீடுகள் அனைத்தும் வருகிற ஜனவரி மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். அந்த பணிகள் வேகமாக நடந்து வருவதால் ஜனவரி மாதத்திற்கு முன்பாகவே அவை முடிவடையும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்க்கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஐந்தாறு நாட்களுக்கு முன்பாக ஒரு அறிக்கை வெளியிட்டார். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தி.மு.க.வினருக்கு தான் வீடுகள் தரப்படுவதாகவும், காண்டிராக்டுகள் கூட தி.மு.க காரர்களுக்கு தான் தரப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறி இருந்தார். ஒரு முன்னாள் முதல்வர் இப்படியா பொறுப்பற்ற முறையில் பேசுவது? கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தவறு நிரூபிக்கப்பட்டால் துறை அமைச்சர் என்கிற முறையில் நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன்.

அதே நேரத்தில் எந்த தவறும் நிரூபிக்கப்படவில்லை என்றால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொறுப்பு ஏற்றுக்கொள்வாரா? என்று நான் அப்போதே கேள்வி கேட்டேன். அந்த கேள்விக்கு ஜெயலலிதா இன்று வரை பதில் அளிக்கவில்லை.

எதிர்கட்சி அணியினர் அரசியல் நோக்கம், வயிற்றெரிச்சல் காரணமாக தான் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். அதற்கு பொதுமக்கள் இடம் கொடுக்காமல் இந்த அரசுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X