ஆஸி பயணம்: வேளாங்கண்ணியில் பிடிபட்ட 14 இலங்கை அகதிகள்-3 ஏஜெண்டுகள் கைது
நாகப்பட்டினம்: 14 இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா அழைத்துச் செல்வதாகக் கூறி வேளாங்கண்ணி விடுதியில் தங்க வைத்து, பணம் பெற்று, மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள அகதிகள் முகாமில் இலங்கை அகதிகள் தங்கி உள்ளனர். அவர்களில் 14 பேர் தமிழக அரசின் அனுமதியின்றி ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டனர்.
இதற்காக அவர்கள் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டுகளை தொடர்பு கொண்டனர். இவர்களை அந்த ஏஜெண்டுகள் வேளாங்கண்ணிக்கு வரவழைத்து அங்கு சில விடுதிகளில் தங்க வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பற்றி தஞ்சை க்யூ பிராஞ்ச் போலீசார் வேளாங்கண்ணி விடுதிகளில் சோதனை நடத்தியபோது 14 பேரும் சிக்கினர். அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப ஏஜெண்டுகள் தலா ரூ.1 லட்சம் வாங்கி இருப்பதும் தெரிய வந்தது.
ஆனால், இந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களை ஏஜெண்டுகள் ஏமாற்றி, மோசடி செய்ய இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அகதி முகாம்களில் இருந்து வெளியேற்றி அழைத்து வந்ததாகவும், வெளிநாடுகளில் கொண்டு போய் விட்டுவிடுவதாகவும் கூறி, அகதிகளிடம் இருந்து பண பெற்று மோசடி செய்ததாகவும் 3 ஏஜெண்டுகளை போலீசார் கைது செய்தனர். இவர்களை நாகப்பட்டிணத்தில் வைத்து போலீசார் பிடித்தனர்.
மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் அனைவரும் மீண்டும் முகாம்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.












Click it and Unblock the Notifications