வேலூர் கிழக்கு அதிமுக மாவட்ட செயலாளரும் மாற்றம்-ஜெ அதிரடி
சென்னை: வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து வாசுவும், பொருளாளர் பதவியிலிருந்து சிவசங்கரனும் மாற்றப்பட்டுள்ளனர்.
வாசு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் மூன்று பேரில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வட சென்னை மாவட்டச் செயலாளர் சேகர் பாபு, மற்று சில மாவட்ட்களின் பொறுப்பாளராக இருந்த வளர்மதியை சமீபத்தில் அந்தப் பொறுப்புகளில் இருந்து நீக்கி டம்மியாக்கினார் ஜெயலலிதா.
திமுகவுக்கு நெருக்கமான 'ஐசரி' புள்ளி மூலம் சேகர் பாபு சமீபத்தில் ஒரு கல்லூரியை ரூ. 150 கோடிக்கு வாங்கியதாகவும் அதில் வளர்மதியின் முதலீடும் இருப்பதாகவும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா மிகக் கோபமாக பேசியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் திருடி விற்று வந்த சேகர் பாபுவுக்கு இத்தனை சொத்துக்கள் வந்து சேரக் காரணம் ஆளும் கட்சியோடு அவர் காட்டி வரும் மறைமுக நெருக்கம் தான் என்றும், அவர் திமுகவிலேயே போய் சேர்ந்தாலும் கவலையில்லை எனறும் ஜெயலலிதா கூறியதாக தகவல்கள் வருகின்றன.
கடந்த மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனை, சேகர் பாபு தான் திமுகவினரோடு சேர்ந்து தோற்கடித்ததாகவும் ஜெயலலிதா புகார் கூறியுள்ளார்.
இந் நிலையி்ல் இன்று வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரையும் ஜெயலலிதா மாற்றியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும் வாசு, பொருளாளர் சிவசங்கரன் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
இதுபோல் வேலூர் கிழக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் பார்த்தீபன், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் விஸ்வநாதன், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி செயலாளர் கோபால், சோளிங்கர் ஒன்றிய செயலாளர் கண்ணன், காட்பாடி சட்டமன்ற தொகுதி இணை செயலாளர் ஆனந்தன் ஆகியோரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இன்று முதல் சிவசங்கரன் நியமிக்கப்படுகிறார். சோளிங்கர் ஒன்றிய செயலாளராக ஆனந்தன் நியமிக்கப்படுகிறார்.
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயலாளராக விஸ்வநாதன், காட்பாடி சட்டமன்ற தொகுதி இணை செயலாளராக சுபாஷ் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
வேலூர் நகர அ.தி.மு.க. அவைத்தலைவர் பொறுப்பில் இருக்கும் வேணுகோபால், நகர செயலாளர் பொறுப்பில் இருக்கும் சூளைமணி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
வேலூர் நகர அ.தி. மு.க. அவைத்தலைவராக எம்.மூர்த்தி, நகரச் செயலாளராக வேணுகோபால் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். வேலூர் நகர எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக சூளைமணி ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இது தவிர மதுரை மாநகர அண்ணா தொழிற்சங்க பேரவை போக்குவரத்து பிரிவிலும், ஆவடி கனரகத் தொழிற்சங்கப் பிரிவிலும், திருச்சி, சேலம், நாமக்கல், தஞ்சை, நாகை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் அண்ணா தொழிற்சங்கத்திலும் பல நிர்வாகிகளை ஜெயலலிதா மாற்றியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மேலும் பலரை ஜெயலலிதா பந்தாடலாம் என்று தெரிகிறது.