லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்புகளுக்கு அமெரிக்க அரசு தடை
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வரவுள்ள நிலையில் இந்தத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க நிதித்துறை விதி்த்துள்ள இந்தத் தடை காரணமாக இந்த இரு தீவிரவாத அமைப்புகளுக்கும் நிதியுதவிகள் செய்வது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும். இதனால் இந்த அமைப்புகளுக்கு நிதி செல்வது கட்டுப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
மேலும் வெளிநாடுகளில் இந்த அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதும் தடைபடும்.
மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் லஷ்கர் ஏ தொய்பாவுக்கு நேரடித் தொடர்பு இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளதால் இந்தத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் ஜெய்ஷ் ஏ முகம்மத் அமைப்பு தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில் அல்-ரஹ்மத் அறக்கட்டளை மூலமாக இந்த அமைப்பு நிதி திரட்டி வருகிறது. இதனால் இந்த அமைப்புக்கும் அமெரிக்கா தடை விதி்த்துள்ளது.
ஒபாமாவின் சுற்றுப் பயணத்தையொட்டி இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இது பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவுக்குக் கிடைத்த முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.