ஜல் புயலை சமாளிக்க 144 படகுகளுடன் அதிகாரிகள் தயார்-பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: ஜல் புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சியும், பிற துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். மீட்புப் பணிகளுக்காக 144 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
சென்னையில் தாழ்வானப் பகுதிகளில் மீட்புப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் விருகம்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, சைதாப்பேட்டை வி.ஜி.பி. சாலை, விநாயகபுரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 10 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை முழுவதும் கிட்டத்தட்ட 144 படகுகள் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
கோபாலபுரம், சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை ஆகிய நான்கு பகுதிகளில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் சூழும் பகுதியில் மக்களுக்கு தடையின்றி உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பலத்த காற்று வீசும்போது மரங்கள் சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது என்பதால், அவற்றை அப்புறப்படுத்துவதற்காக 20 அதிநவீன மரம் வெட்டும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புயலால் பாதிக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.
இதில் அலுவலர்கள் சுழற்சி முறையில் பணிபுரிவர். 25386386, 25619336 ஆகிய தொலைபேசி எண்களில் இந்த கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
பள்ளிகளுக்கு விடுமுறை
ஜல் புயல் மிரட்டல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் இன்று நள்ளிரவுவாக்கில் கரையைக் கடக்கவுள்ளதாலும், அப்போது பெரும் மழை பெய்யும் என்பதாலும் நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல கடலூர், விழுப்புரம், நாகப்பட்டனம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை:
புயல் காரணமாக புதுச்சேரிக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும் நாளை அந்த மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறையிர் உஷார்:
ஜல் புயல் இன்று கரையை கடக்க உள்ளதை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடியில் வருவாய் துறையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் கூறுகையில்,
நெல்லை மாவட்டத்தில் போதிய மழை இல்லை. புயல் கரையை கடக்க இருப்பதால் இன்று பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்கும் விதமாக அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் அலுவலர்கள், தாசில்தார்கள் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
ஜல் அபாயத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் மீனவர்கள் வரும் 8ம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும் பலத்த மழை பெய்யும் பட்சத்தில் நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள வருவாய் துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு எச்சரிக்கை:
ஜல் புயல் இன்றிரவு கரை கடக்க உள்ளதையடுத்து கல்பாக்கம் அணு மின் நிலையத்துக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடப்பதற்கு சில மணி நேரத்துககு முன்பு கடல் கொந்தளிபபு அதிகமாக இருக்கும் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே போல துறைமுகங்கள், தெற்கு ரயில்வே, மின் வாரியம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளுக்கும் எச்சரிக்கை அனுப்பியுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
புயல்-கன மழை காரணமாக ஆறுகள், குளங்கள், கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்பதால் பாலங்களை தீவிரமாகக் கண்காணிக்குமாறு ரயில்வே துறை தனது ஊழியர்களுக்கும், ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் அறிவுறுத்தியுள்ளது.
பாலங்கள் மற்றும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளைக் மிக மிகக் குறைவான வேகத்தில் ரயில்களை இயக்குமாறு என்ஜின் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல துணை மின் நிலையங்கள், டிரான்பார்மர்கள் மற்றும் மின் கேபிள்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதால் போதிய முன்னெச்சரிக்கைகளை எடுக்குமாறு தனது ஊழியர்களுக்கு மின்துறை உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications