காவிரி ஆற்றில் தினமும் 10,000 லாரிகளில் மணல் கொள்ளை-ஜெயலலிதா
சென்னை: காவிரி ஆற்றில் தினமும் 10,000 லாரிகளில் மணல் கொள்ளையடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அரசு கணக்கில், ஒரு லாரிக்கு மூன்று யூனிட் என்ற அடிப்படையில் தினமும் 900 லாரி மணல் அள்ளப்படுவதாக மட்டும் கணக்கு காட்டப்படுகிறது என்று அதிமுக. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ள தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் மணல் கொள்ளை தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
அளவற்ற முறையில் மணல் எடுப்பதைத்தடுப்பது; நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது; பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி நியாயமான விலையில் முறையாக மணல் கிடைக்க வழிவகை செய்வது; மாநில அரசின் வருவாயைப் பெருக்குவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், 2003ம் ஆண்டு எனது ஆட்சிக் காலத்தில், பொதுப்பணித்துறை மூலம் அரசே மணல் குவாரிகளை நடத்த ஆரம்பித்தது.
அதன்படி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தான் மணல் அள்ளப்பட வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு குவாரிகளை இயக்கக்கூடாது. ஆனால் இதற்கு முற்றிலும் நேர்மாறான போக்கு நிலவுகிறது.
அண்மையில், கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் 31.10.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் மணல் லாரி புலியூர் சிமெண்ட் ஆலை அருகில் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த 34 வயது மதிக்கத்தக்க கல்யாணி என்கிற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார்.
மேற்படி சம்பவத்தையடுத்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கழக கொள்கை பரப்புச்செயலாளரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை மற்றும் கரூர் மாவட்டக்கழகச்செயலாளரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டு இருக்கிறது.
இருப்பினும், மறியல் போராட்டம் நடந்து முடிந்த ஒரு சில மணி நேரங்களிலேயே மணல் லாரிகள் ஓட ஆரம்பித்து விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில், அன்று இரவு 10 மணிக்கு திருட்டு மணலை ஏற்றிச் சென்ற ஏழு லாரிகளை மாயனூர் காவல் நிலையம் அருகே தம்பிதுரை மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோர் மடக்கிப்பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக, கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தினமும் 10,000 லாரிகளில் மணல் கொள்ளையடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், அரசு கணக்கில், ஒரு லாரிக்கு மூன்று யூனிட் என்ற அடிப்படையில் தினமும் 900 லாரி மணல் அள்ளப்படுவதாக மட்டும் கணக்கு காட்டப்படுகிறது.
இதன்படி, மூன்று யூனிட் மணல் 900 ரூபாய் என்ற அடிப்படையில் 900 லாரி மணலுக்கான தொகை, அதாவது கிட்டதட்ட மாதம் 2 கோடி ரூபாய் அரசு கருவூலத்தை சென்று அடைகிறது. மேற்படி 900 லாரிகளில் ஏற்றிச்செல்லும் கூடுதல் மணல் மற்றும் மீதமுள்ள சுமார் 9,100 லாரி மணல் ஆகியவற்றை கடத்தி அதிக விலைக்கு விற்கின்றனர்.
இந்த மணல் கொள்ளையின் மூலம் மாநில அரசின் வருவாய் குறைவதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசுக்கு சேர வேண்டிய வருமானவரி ஏய்க்கப்படுகிறது, கள்ளப் பணம் ஊக்குவிக்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், மணல் கொள்ளையின் காரணமாக, நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்டது. மேலும், காவிரி ஆற்றிலிருந்து விவசாய நிலங்களுக்கு நீர் எடுத்துச்செல்லும் கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து, 68,156 ஏக்கர் விவசாய நிலங்கள் கரூர் மாவட்டத்தில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளன.
இது தவிர, கரூர் மாவட்டத்தில் மட்டும் ஆண்டு தோறும் 500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
விவசாய நிலங்களை பாதிப்புக்குள்ளாக்கி, நிலத்தடி நீரை பாழ்படுத்தி, மனித உயிரிழப்புகளுக்கு காரணமான மணல் கொள்ளைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்படி சம்பவத்தில் பலியான கல்யாணி என்கிற பெண்ணின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், அப்பெண்ணின் கணவருக்கு அரசு வேலையும் வழங்குமாறு திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications