மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் ராஜினாமா-காங். ஏற்பு
மும்பை: ஆதர்ஷ் அடுக்குமாறு குடியிருப்பு ஊழலில் தொடர்புடைய மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணின் ராஜினாமாவை காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக் கொண்டுவிட்டது.
மும்பை கொலாபா கடற்படை தளம் அருகே கார்கில் போர் தியாகிகள் குடும்பத்துக்காக வீடு கட்ட நிலம் ஒதுக்கப்பட்டது. இங்கு 5 மாடிகள் கட்ட அனுமதி வாங்கிவிட்டு பின்னர் விதிமுறைகளை மீறி 31 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டது.
இந்த வீடுகளை கார்கில் போர் தியாகிகளுக்கு ஒதுக்குவதற்கு பதிலாக மராட்டிய அமைச்சர்கள், அரசியல்வாதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் பினாமி பெயரில் தங்களுக்கே ஒதுக்கி கொண்டனர்.
இந்த முறைகேட்டில் முதல்வர் அசோக் சவாணும் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தார். விதிகளை மீற உதவிய அவருக்கு 3 வீடுகள் குறைந்த விலைக்கு ஒதுக்கப்பட்டன. இவற்றை தனது மாமியார், மைத்துனர், மைத்துனி பெயர்களில் பெற்றிருந்தார்.
இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, .கே.அந்தோணி ஆகியோரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டார். அவர்கள் சோனியாவிடம் அறிக்கை கொடுத்தனர். அதில் அசோக் சவானுக்கு முறைகேட்டில் பங்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து சவாணிடம் சோனியாவே நேரில் விசாரணை நடத்தியதோடு, அவரது ராஜினாமா கடிதத்தையும் கேட்டு வாங்கினார்.
இருப்பினும் அமெரிக்க அதிபர் ஒபாமா மும்பையில் சுற்றுப் பயணம் செய்ய இருந்ததால், அசோக் சவாணை பதவியில் நீடிக்க விட்டது காங்கிரஸ். ஒபாமாவை வரவேற்கவும், அவரது நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும் வேண்டிய பணி சவாணிடம் இருந்ததால் அந்த நேரத்தில் முதல்வரை மாற்றுவது சரியாக இருக்காது என்பதால் இந்த விவராரம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந் நிலையில் ஒபாமா தனது மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று டெல்லிக்குச் சென்ற நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து ஆளுநர் சங்கரநாராயணனிடம் முறைப்படி கடிதம் தருமாறு காங்கிரஸ் தலைமை சவாணுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று காலை அசோக் சவாண் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இந்தப் பதவிக்கு மத்திய அமைச்சர்கள் சுஷில் குமார் ஷிண்டே, விலாஸ் ராவ் தேஷ்முக், பிரிதிவ் ராஜ் சவான், முகுல் வாஸ்னிக் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.
இதில் விலாஸ்ராவ் தேஷ்முக், சுஷில் குமார் ஷிண்டேவுக்கும் ஆதர்ஷ் ஊழலில் தொடர்பிருப்பதாக புகார் உள்ளது. எனவே பிரிதிவிராஜ் சவான் முதல்வராக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் பிரதமர் அலுவலக அமைச்சராக உள்ளார். சோனியாவுக்கும் மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இன்று ஒபாமா தனது இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தேனேஷியா கிளம்பினார்.












Click it and Unblock the Notifications