கீர்த்திவாசனைக் கடத்திப் பணம் பெற்று லண்டன் தப்ப திட்டமிட்டிருந்த இளைஞர்கள்
சென்னை: சென்னை சிறுவன் கீர்த்திவாசனைக் கடத்தி அதன்மூலம் பெற்ற பணத்தைக் கொண்டு லண்டனுக்குத் தப்பி ஓடுவதற்கு திட்டமிட்டிருந்ததாக கைதாகியுள்ள இரு என்ஜீனியர் இளைஞர்களும் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் விசாரணையின்போது இருவரும் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதார்களாம்.
சென்னையைச் சேர்ந்த கீர்த்திவாசன் என்ற 13 வயது சிறுவன் சமீபத்தில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை போலீஸார் மிகவும் சாதுரியமாக நடந்து கொண்டு சிறுவனை பத்திரமாக மீட்டனர்.
24 மணி நேரத்தில் சிறுவன் மீட்கப்பட்டான். இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட விஜய், பிரபு என்ற இரு இளைஞர்களைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் கொடுக்கப்பட்ட பிணையத் தொகையான 98 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
தற்போது இந்த வழக்கை ஜெ.ஜெ. நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நான்கு நாள் காவலில் அவர்களை எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணையின்போது இருவரும், நாங்கள் வேறு எந்தக் குற்றமும் செய்யவில்லை. பெரிய தவறு செய்து விட்டோம் என்று கூறி தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதனராம்.
கீர்த்திவாசனைக் கடத்தியதன் மூலம் கிடைத்த பணத்துடன் லண்டனுக்குத் தப்பி ஓடி விடலாம் என இருவரும் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications