திமுக கரை வேட்டியில் வந்த மாஜி அதிமுக எம்.எல்.ஏக்கள்
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கோவில்பட்டி ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் ராஜேந்திரன் ஆகிய இரு எம்எல்ஏக்களும் திமுக கரை போட்ட வேட்டியுடன் சட்டசபைக்கு வந்தனர்.
சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடருக்கு இவர்கள் திமுக கரைவேட்டியில் வந்து அதிமுக எம்எலஏக்களை எரிச்சலூட்டினர்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் போதே அதிமுகவிருந்து நீக்கப்பட்டுவிட்ட அப்போது எந்தக் கட்சியின் அடையாளமும் இடம் பெறாத வேட்டியிலும், பேண்ட்-சட்டையிலும் சட்டசபைக்கு வந்தனர்.
முன்னதாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின் இருவரும் திமுக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனாலும், திமுகவில் இணைந்தால் பதவி பறிபோய்விடும் என்பதால் திமுகவில் இணையவில்லை.
இந் நிலையில் நேற்று சட்டசபைக்கு திமுக கரை போட்ட வேட்டியில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
அதிமுக ஆட்சியில் வேட்டி அவிழ்க்கப்பட்டதில் இருந்து வழக்கமாக வெள்ளை பேண்ட்-வெள்ளை சட்டையிலேயே சட்டசபைக்கு வரும் அமைச்சர் பரிதி இளம்வழுதியும், திமுக கரை வேட்டியில் வந்தார்.
ஒரு கூட்டத்தில், அவரை திமுக கரை வேட்டி கட்டச் சொல்லி முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியது நினைவுகூறத்தக்கது.
எம்எல்ஏக்களுடன் ஜெயலலிதா ஆலோசனை:
இந் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று ஆலோசனை நடத்தினார்.
நவம்பர் 12ம்ம் தேதி வரை சட்டசபைக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில் அதில் எந்தெந்தப் பிரச்சனைகளை எழுப்புவது, எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து இக் கூட்டத்தில் ஜெயலலிதா பல 'டிப்ஸ்களை' தந்தார்.
சட்டம்- ஒழுங்கு பிரச்சனை, மாணவர்கள் கடத்தல், மணல் கொள்ளை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.