இலங்கை தமிழர் மறுகுடியேற்றம்: கருணாநிதிக்கு சோனியா கடிதம்
சென்னை: இலங்கையில் முகாம்களில் வசிக்கும் 30,000 தமிழர்களை மறு குடியேற்றம் செய்யவும், தமிழர் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
இலங்கையில் முகாம்களில் வசிக்கும் 30,000 தமிழர்களை துரிதமாக மறு குடியேற்றம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் சோனியாவுக்கு கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து கடந்த ஞாயி்ற்றுக்கிழமை சென்னை வந்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய சிதம்பரம், இது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் மத்திய அரசு பேசியுள்ளதாகவும், மழை நின்ற பிறகு இந்தப் பணி வேகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருணாநிதிக்கு சோனியா காந்தி எழுதியுள்ள பதில் கடிதத்தில், தாங்கள் 8.10.2010 அன்று எழுதிய கடிதம் கிடைத்தது. அக் கடிதத்தில் 30 ஆயிரம் தமிழர்களின் மறு குடியேற்றம் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்.
இலங்கை தமிழர் மீள்குடியேற்றத்திற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர்களின் மறுவாழ்வு குறித்து இலங்கை அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மேலும் தமிழர் பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.