அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்காக ரூ. 68,000 அபராதம் கட்டிய சேலம் மாநகராட்சி!
சேலம்: சேலம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான காரை முறைப்படி பதிவு செய்யாமல், வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பயன்படுத்தி பயன்படுத்தி வந்ததால், காலதாமத அபராத கட்டணமாக, 68 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில், சேலம் மாநகர மேயராக சுரேஷ்குமார் இருந்த போது, மேயருக்கு புதிய கார் வாங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க -வைச் சேர்ந்த ரேகா பிரியதர்ஷினி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, 2007 ல் புதிய இன்னோவா கார் சேலம் மாநகராட்சிக்கு வாங்கப்பட்டது. ஆனால், மேயருக்காக வாங்கப்பட்ட கார், வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டு, அவர் அதை பயன்படுத்தி வந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, அந்த காரில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான காரை அமைச்சர் பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேயருக்காக ஒதுக்கப்பட்ட டி.என்.30 ஏஏ 9559 என்ற பதிவு எண்ணுடன் உள்ள கார், முறைப்படி பதிவு செய்யப்படவில்லை என்று, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று, அமைச்சர் பயன்படுத்தி வரும் காரை சேலம் மேற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அதற்கு பதிவு மற்றும் அபராத கட்டணமாக ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 788 ரூபாய் செலுத்தி முறைப்படி பதிவு செய்தனர்.
மேலும், காலதாமத கட்டணமாக ரூ 68 ஆயிரம் ரூபாய்க்கான செக் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications