சோனியா, ராகுல் காந்திக்கு அத்வானி கொடுத்த திடீர் டீ பார்ட்டி
டெல்லி: நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உரையாற்றி முடித்ததும், பாஜக மூத்த தலைவர் அத்வானி நாடாளுமன்ற வளாகத்தில் சிலருக்கு டீ பார்ட்டி கொடுத்தார். அதில் கலந்து கொள்ளுமாறு சோனியாவையும், ராகுலையும் அழைக்கவே அவர்களும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு டீ சாப்பிட்டனர்.
நேற்று அத்வானிக்கு 83வது பிறந்த நாள். ஆனால் அது ஒபாமாவின் வருகையால் பெரியஅளவில் கவனிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் தேனீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் அத்வானி.
ஒபாமா பேசி முடித்துச் சென்றதும் இந்த தேனீர் விருந்து நடந்தது. அந்த சமயத்தில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தங்களது இல்லத்திற்குச் செல்வதற்காக காருக்கு காத்திருந்தனர்.
இதைப் பார்த்த அத்வானி, அவர்களை நெருங்கிச் சென்று தேனீர் விருந்தில் பங்கேற்குமாறு அழைத்தார். இதை சோனியாவும், ராகுலும் உடனடியாக
ஏற்றுக் கொண்டு அவருடன் சென்றனர்.
அப்போதுதான் அத்வானியின் பிறந்தநாள் குறித்த விஷயம் தெரிய வந்தது அவர்களுக்கு. இதையடுத்து இருவரும், அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இன்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.