மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கில் ராமதாஸ் பெயர் நீக்கம்-மறு விசாரணைக்கு உத்தரவு
திண்டிவனம்: திண்டிவனத்தில், முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கின் குற்றப்பத்திரிக்கையிலிருந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் உள்பட 6 பேரின் பெயர்களை நீக்கியதற்கு திண்டிவனம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மீணடும் விசாரிக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது.
திண்டிவனம் தொகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக சி.வி.சண்முகம், பா.ம.க. வேட்பாளராக அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கருணாநிதி போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு 8.9.2006 அன்று நடந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் திண்டிவனம் மொட்டையர் தெருவில் உள்ள அவரது வீட்டு முன்பு உட்கார்ந்திருந்தார்.
அப்போது ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றது. ஆனால் அவர், அங்கு நின்ற காருக்குள் புகுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கொலை செய்ய விடாமல் தடுத்த அ.தி.மு.க. தொண்டர் முருகானந்தத்தை அந்த கும்பல் வெட்டி கொலை செய்தது.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனுவாசன், கருணாநிதி, பிரதீபன், ரகு, குமரன் உள்ளிட்ட பா.ம.க.வை சேர்ந்த 21 பேர் மீது, சி.வி.சண்முகம் ரோசனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
ஆனால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனுவாசன், கருணாநிதி, பிரதீபன் ஆகிய 6 பேரின் பெயரை நீக்கி விட்டு, ரகு, குமரன், சிவா உள்ளிட்ட 15 பேர் மீது மட்டும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து, டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட 6 பேர் பெயரை வழக்கில் சேர்க்க கோரி, சி.வி.சண்முகம் திண்டிவனம் விரைவு நீதிமன்றம் 1-ல் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்தார். அதில் அ.தி.மு.க. தொண்டர் முருகானந்தத்தை கொலை செய்த வழக்கிலும், என்னை(சி.வி.சண்முகம்) கொலை செய்ய முயன்ற வழக்கிலும் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட 6 பேரின் பெயரை சேர்க்க வேண்டும். வழக்கு தொடர்பாக போலீசில் பதிவு செய்யப்பட்ட கேஸ் டயரி'யை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், போலீசார் போட்ட வழக்கை ரத்து செய்து விட்டு, டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட 6 பேரையும் வழக்கில் சேர்ப்பதா? நீக்குவதா? என்பது குறித்து மறு விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிடும்படி திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-க்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1ல் நடந்து வருகிறது. அக்டோபர் 28-ந் தேதி இரு தரப்பினரின் வாதத்தையும் மாஜிஸ்திரேட் பிரகாஷ் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, அ.தி.மு.க. தொண்டர் கொலை வழக்கு மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட 6 பேரின் பெயரை சேர்ப்பதா? நீக்குவதா? என நவம்பர் 9-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மாஜிஸ்திரேட் கூறினார்.
அதன்படி நேற்று நீதிபதி தனது உத்தரவைப் பிறப்பித்தார். அதில், முருகானந்தம் கொலை வழக்கு மற்றும் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கையும், அதில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட 6 பேரின் பெயர்களை சேர்ப்பதா? நீக்குவதா? என்பது குறித்தும் போலீசார் மறு விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
ராமதாஸ் உள்ளிட்டோர் பெயரைச் சேர்க்க வேண்டும் என்று கோரி சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்ததால்தான் பாமக, அதிமு கூட்டணி உடைந்தது என்பது நினைவிருக்கலாம்.
திண்டிவனத்தில் பதட்டம்:
திண்டிவனம் கோர்ட்டின் உத்தரவால் டாக்டர் ராமதாஸின் சொந்த ஊரான திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்களில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications