காங். தலைவர் பலராமனை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை-ஸ்டாலின் உறுதி
சென்னை: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உ.பலராமனை கொலை வெறியுடன் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது சூடான விவாதம் நடந்தது. பின்னர் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசுகையில்,
9-11-2010 அன்று காலை 11.00 மணி அளவிலே வன்னிய குல சத்ரிய மகா சங்க அமைப்பாளரும், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பலராமன், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பழைய வண்ணாரப்பேட்டை என்கிற முகவரியில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்தபோது, வடசென்னை பகுதியைச் சார்ந்த சத்தியா என்கிற வண்ணை சத்தியா, சசிகுமார், அரிகுமார் உள்ளிட்ட சிலர் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து, கத்தியால், பலராமனையும், அவரது உதவியாளர்கள் இருவரையும் தாக்கிவிட்டு, தப்பிச் சென்றிருக்கிறார்கள்.
காயமடைந்தவர்கள் தண்டையார்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து காவல் துறையினர் முறையாக வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணையின்போது, இவ்வழக்கில் எதிரிகளாக வண்ணை சத்தியா, சசிகுமார் மற்றும் அரிகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த வழக்கிலே மற்ற எதிரிகளை கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை காவல் துறை எடுத்து வருகிறது. வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. எனவே, உறுதியாக இந்த அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கையை, உரிய வகையில் எடுக்கும் என்ற உறுதியை நான் இந்த அவைக்கு தெரிவிக்கிறேன் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications