கணவன் இறந்ததால் துக்கம்-குழந்தையைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
சேரன்மகாதேவி: வீரவநல்லூர் அருகே 3 வயது குழந்தையை விஷம் கொடுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகேயுள்ள பொட்டல் அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன். இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு சந்தியா, ராஜபிரதீப் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். முத்துகிருஷ்ணன் பலசரக்கு கடை நடத்தி வந்தார்.
கடந்த மாதம் 23-ம் தேதி அவரது கடை வழியாக வந்த லாரி அருகில் இருந்த மின்கம்பத்தில் உரசி அதிலிருந்து மின்வயர் அறுந்து விழுந்தது. இதனை முத்து கிருஷ்ணன் எடுத்து போடும்போது மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
கணவர் இறந்த துக்கத்தில் இருந்த அம்பிகா குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை ராஜபிரதீப்புக்கு கொடுத்தார். பின்னர் சந்தியாவுக்கு கொடுக்க முயன்றபோது அவர் அங்கிருந்து ஓடி அருகில் உள்ள உறவினர் வீட்டில் போய் சொல்லியுள்ளார்.
பயந்து போன அம்பிகா வீட்டை பூட்டிக் கொண்டு மீதமிருந்த மருந்தை தானும் குடித்து மயங்கி விழுந்தார். இதில் ராஜபிரதீப் வாயில் நுரை தள்ளி இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அம்பிகா நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.