தென்காசி பஸ் ஸ்டாண்டில் பயணிகளை ஓட ஓட விரட்டி தாக்கிய டிரைவர்-கண்டக்டர் கைது
தென்காசி: தென்காசியில் பயணிகளை ஓட ஓட விரட்டி உருட்டு கட்டையால் தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் பாரதி நகர் 2-ம் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த பிரமநாயகம் மகன் காளிமுத்து. இவர்கள் இருவரும் நயினாகரம் செல்வதற்காக செங்கோட்டையில் இருந்து ஒரு தனியார் பஸ்சில் ஏறினர்.
முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த இருவரையும் பஸ் கண்டக்டரான கட்டளைகுடியிருப்பைச் சேர்ந்த முருகன் பின்னால் சென்று அமருமாறு கூறினார். அதற்கு இருவரும் மறுத்து விட்டனர். பஸ் தென்காசி பேருந்து நிலையம் வந்ததும் மீண்டும அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த கண்டக்டர் முருகன் மற்றும் டிரைவர் சங்கரநாராயணன் ஆகியோர் பஸ்சில் கிடந்த உருட்டு கட்டையால் மணிகண்டன், பிரமநாயகத்தை தாக்கினர். இதனால் அவர்கள் அலறியவாறே பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர். ஆனால் அப்போதும் விடாமல் ஓட ஓட விரட்டித் தாக்கினர்.
படுகாயம் அடைந்த இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து தென்காசி சப்-இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் வழக்கு பதிவு செய்து சங்கரநாராயணன், முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.