அதிமுக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும்: புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆரூடம்
தென்காசி: யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் அதிமுக கூட்டணி தான் உறுதியாக ஆட்சியை பிடிக்கும் என்று தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி ஆனந்தா கிளாசிக் ஹோட்டலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
புதிய தமிழகம் கட்சி கடந்த 1997-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. அடுத்த மாதம் 15-ம் தேதி கட்சியின் 13வது ஆண்டு தொடக்க விழா நடக்கிறது.
இதனை முன்னிட்டு டிசம்பர் 15-ம் தேதி முதல் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் பல்வேறு சமூகப் பணிகளை நடத்துகிறார்கள். புதிய தமிழகம் கட்சியில் தற்போது 17 லட்சம் தொண்டர்கள் உள்ளனர்.
வரும் மார்ச் மாதம் 15-ம் தேதிக்குள் 30 லட்சம் தொண்டர்களை சேர்க்கும் பொருட்டு நவம்பர் 15-ம் தேதி முதல் தொடர்ச்சியாக அனைத்து கிராம, நகர, ஒன்றிய பகுதிகளில் உறுப்பினர்களை சேர்க்கும் முகாம்களை நடத்த இருக்கிறோம்.
வருகிற சட்டமன்ற தேர்தல் பணிகளை தீவிரப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பெயர் விபரம் வருமாறு,
வி.சுப்பிரமணியன்-சங்கரன்கோவில், ராஜா-வாசுதேவநல்லூர், ராசையா-கடையநல்லூர், மூர்த்தி-தென்காசி, எஸ்.என். முருகன்-அம்பை, ஏ.ராமசந்திரன்-நாங்குநேரி, முருகேசன்-ஆலங்குளம், அய்யாசாமி-நெல்லை, மணிகண்டன்-பாளையங்கோட்டை, வேலாயுதம்-ராதாபுரம், தொண்டரணி பொறுப்பாளராக ஜெயக்குமாரும், செய்தி தொடர்பாளராக கண்மணியும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications