பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டவில்லை: அமைச்சர் துரைமுருகன் உறுதி
சென்னை: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டவில்லை என்று சட்ட அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் நேற்று துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டியுள்ளதா இல்லையா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு முயன்று வருகின்றது. இதற்காக ரூ. 200 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மேலும், அணை கட்ட கணேசபுரத்தில் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது.
இது தவிர அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தால் தெலுங்கு - கங்கை திட்டத்தின் மூலம் சென்னைக்கு வரும் தண்ணீரை நிறுத்தி விடுவோம் என்று அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் மிரட்டியுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானசேகரனும், அதிமுகவைச் சேர்ந்த பாண்டுரங்கனும் கூறினர்.
அதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் பொன்முடி ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டத் திட்டமிடுவதாகத் தெரிந்ததுமே முதல்வர் கருணாநிதி ஆந்திர முதல்வருக்கும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதினார். இதையடுத்து அணை கட்டுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை ஒன்றும் கட்டவே இல்லை என்று அமைச்சர் துரை முருகனும் தெரிவித்தார். ஆந்திர அரசு அணை கட்ட நிதியும் ஒதுக்கவில்லை, கால்வாயும் வெட்டவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார். கணேசபுரத்தில் வெட்டப்பட்டுள்ள கால்வாய் வேறு பயன்பாட்டிற்காகத் தான் வெட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications