கள் இறக்க அரசு அனுமதிக்க தென்னை வாரியம் பரிந்துரைக்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை
கோவை: தமிழகத்தில் கள் இறக்க அனுமதியளிக்க தென்னை நல வாரியம் தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட தலைவர் தங்கராஜ், தமிழ்நாடு தென்னை நல வாரிய தலைவர் ராஜ்குமாருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
கேரளாவை விட தமிழகத்தில் தேங்காய் விளைச்சல் அதிகம். ஆனால் சிறு விவசாயிகள், விவசாயம் மூலம் லாபம் இன்றி தவித்து வருகின்றனர்.
விவசாய நிலத்திற்கு நல்ல விலை கிடைத்தால் அதை விற்று விட்டுச் செல்ல தயாராக உள்ளனர்.
விவசாயிகளின் வாழ்வு செழிக்க வேண்டும் என்றால் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். இந்த கோரிக்கையை முன் வைத்து கடந்த 5 வருடங்களாக விவசாய அமைப்புகள் போராடி வருகின்றனர்.
தேர்தலுக்கு பின்பு குழு அமைத்து நல்ல முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கருணாநதி தெரிவித்தார். அதன்படி நீதிபதி சிவசுப்ரமணியம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆறு மாதத்தில் குழுவின் அறிக்கை வெளியிடப்படும் என அரசு தெரிவித்தது. இதுவரை அறிக்கை வெளியிடப்படவில்லை.
40 முதல் 50 சதவிகிதம் ஆல்கஹால் உள்ள உள்நாட்டில் தயாரிக்கப்படும் அன்னிய நாட்டு மது வகைகளை அரசே டாஸ் மாக் கடைகள் மூலம் விற்பனை செய்யும்போது, நான்கு முதல் ஐந்து சதவிகிதம் மட்டுமே ஆல்கஹால் உள்ள கள்ளால் மக்களுக்கு பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்படாது.
கள் இறக்க அனுமதி அளித்தால் கிராமப் பொருளாதாரம் மேன்மை அடையும். சிறு விவசாயிகள், பல்வேறு தொழிலாளர்கள் பயனடைவர். எனவே, கள் இறக்க அனுமதிக்க தாங்கள் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.