சென்னை சிறுவனை கடத்திய 2 இளைஞர்களுக்கும் பொங்கலுக்குள் தண்டனை உறுதி-போலீஸ் கமிஷனர்
சென்னை: சென்னை சிறுவன் கீர்த்திவாசனை கடத்தி பிடிபட்டுள்ள இரண்டு என்ஜீனியர்களுக்கும் வருகிற பொங்கல் பண்டிகைக்குள் தண்டனை வாங்கித் தருவோம் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த கீர்த்திவாசனைக் கடத்தி ரூ. 1 கோடி கேட்டு மிரட்டி, பணத்தையும் துணிகரமாக வாங்கிக் கொண்டு தப்பிய விஜய், பிரபு ஆகிய இரு என்ஜீனியர் இளைஞர்களை சென்னை போலீஸார் மிகவும் திறமையாக பிடித்த சம்பவம் சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்தியது.
இரு இளைஞர்களையும் தற்போது போலீஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். பணத்திற்காக மட்டுமே இந்த கடத்தல் நாடகத்தில் ஈடுபட்டதாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில்,
சென்னை அண்ணா நகரைச்சேர்ந்த பள்ளி மாணவன் கீர்த்திவாசன். கடத்தப்பட்ட வழக்கு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
அதன் பிறகு விரைவு கோர்ட்டில் விசாரணை நடத்தி பொங்கலுக்குள் வழக்கு விசாரணையை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவோம் என்றார் அவர்.