ஊழலுக்கான தண்டனையில் இருந்து ஆட்சியாளர்கள் ஒரு போதும் தப்பிக்க முடியாது-மதசார்பற்ற ஜனதாதளம்
நாகர்கோவில்: ஸ்பெக்டரம் உள்ளிட்ட ஊழல்களில் இருந்து ஆட்சியாளர்கள் ஒரு போதும் தப்பபிக்க முடியாது என மதசார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதசார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில் கூறியதாவது,
மத்திய அரசு ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் விளையாட்டு, ஆதர்ஷ் குடியிருப்பு போன்ற பெரிய ஊழல்களில் சிக்கி இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
காமன்வெல்த் போட்டிகளில் மட்டும் ரூ. 70 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இது குறித்து விசாரணை நடத்த எதிர்கட்சிகள் விடுத்த கோரிக்கையை பாராளுமன்றத்தில் எதிர்கொள்ள முடியாமல் அதில் இருந்து நழுவி விட காங்கிரஸ் முயற்சி செய்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அமைச்சர் ராசா ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தவுடன் அவர் ராஜினாமா செய்ய மறுத்ததோடு, இந்த விவகாரம் குறித்து பிரதமருக்கும் தெரியும் என்று கூறியுள்ளார்.
நாட்டுமக்களின் வரிப்பணம் சுரண்டப்படுவதும், கொள்ளையடிக்கப்படுவதும் தான் அரசு ஏற்றுக்கொண்ட கொள்கையா என கேள்வி எழுகிறது. மேற்கண்ட ஊழல்களை அரசு முற்றிலும் மறுத்துவிட முயற்சித்தாலும், மக்கள் இவற்றை எல்லாம் மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, இதற்கான தண்டனையில் இருந்து ஆட்சியாளர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications