கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை: மக்கள், வியாபாரிகள் கவலை
பொதுமக்கள் அனைவரும் தங்கள் உணவில் பயன்படுத்தும் முக்கிய பொருள் வெங்காயம். இது உள்ளி (சிறிய வெங்காயம்), பல்லாரி என இரண்டு ரகங்களில் விற்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து நெல்லைக்கு வெங்காயம் வந்து கொண்டிருந்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் வெங்காய பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் வெங்காய அறுவடை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் பெரிய அளவிற்கு வெங்காய விளைச்சல் இல்லை. இதையடுத்து தமிழகத்திற்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால் வெங்காய விலை கடு்மையாக உயர்ந்துள்ளது.
பாளையங்கோட்டை சந்தையில் ஒரு கிலோ சிறிய வெங்காயம் ரூ.40க்கு விற்கப்படுகிறது. முதல் தர வெங்காயம் ரூ.44 வரை விற்பனையாகிறது. பல்லாரியும் கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது.
இதனால் நடுத்தரவாசிகள், சிறிய வர்க்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து வெங்காய வியாபாரி ஒருவர் கூறுகையில், தீபாவளி பண்டிகையின் போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.30க்கு விற்கப்பட்டது. தொடர் மழை காரணமாக வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால் வெங்காய விலை உயர்ந்துள்ளது.
நவம்பர், டிசம்பர் மாதங்களும் மழை காலம் என்பதால் வெங்காய விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றார்.