ரோசய்யா.. இது பேராசைய்யா! - சிரஞ்சீவி காட்டம்
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ரோசய்யா பதவிப் பேராசை பிடித்து அலைகிறார் என்று கடுமையாகத் தாக்கினார் நடிகரும் பிரஜா ராஜ்யம் தலைவருமான சிரஞ்சீவி.
சிரஞ்சீவி இன்று ஹைதராபாத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஆந்திராவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பலகோடி மதிப்புள்ள பயிர்கள் நாசமாயின். வீடுகள் இடிந்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆந்திர அரசு நிதி உதவிகூடச் செய்யவில்லை.
மத்திய அரசிடம் நிவாரண நிதி பெறவும் எந்த முயற்சியும் செய்யவில்லை.
ஆனால் முதல்வர் ரோசய்யாவுக்கு இதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை. அவர் கவலை எப்படியாவது பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதுதான். மத்திய அரசிடம் விவசாயிகளுக்கு நிவாரண நிதி கேட்டால் தனது பதவி போய்விடுமோ என்று பயப்படுகிறார்.
இவர் முதல்வராக இருக்கும்வரை ஆந்திரா வளர்ச்சி அடையாது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கும் கெட்டு விட்டது.
ரோசய்யா போன்ற திறமையற்ற முதல்வரை நியமித்து ஆந்திரா வளர்ச்சி அடைவதை தடுத்துவிட்டனர். ஆந்திர காங்கிரஸ் எம்.பி.க்களும் மாநில நலனுக்காக குரல் கொடுக்கவில்லை. அவர்களும் சுயநலவாதிகளாகத்தான் உள்ளனர்...", என்றார்.