தணிக்கைத் துறையின் விமர்சனங்கள் பாரபட்சமின்றி இருக்க வேண்டும்-கருணாநிதி
சென்னை: ஜனநாயகம் வெற்றிக்கரமாக செயல்படுவதற்கு கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையின் விமர்சனங்களும், கண்காணிப்பும் அவசியம் என்றும், அதே நேரத்தில் அரசின் திட்டங்கள் பற்றிய ஆய்வறிக்கை நியாயமாகவும், எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை அலுவலகத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதியின் உரையை வாசித்தார்.
அதில் கருணாநிதி கூறியிருப்பதாவது: ஜனநாயகம் வெற்றிக்கரமாகவும், சிறப்பாகவும் செயல்படுவதற்கு கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையின் விமர்சனங்களும், கண்காணிப்பும் அவசியம்.
அத்தகைய பணியை கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த கண்காணிப்பும், விமர்சனங்களும் நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் இருக்க வேண்டும். துல்லியமான தகவல்களின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்.
தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செய்து வருகிறது. கலைஞர் காப்பீட்டுத்திட்டம், 108 அவசர கால ஊர்தித் திட்டம், கலைஞர் வீடு வழக்கும் திட்டம் போன்றவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் கனவை நினைவாக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.