விமான சேவை துவங்க ரூ.15 கோடி லஞ்சம் கேட்ட அமைச்சர்!-டாடா பகீர் குற்றச்சாட்டு
இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'21ம் நூற்றாண்டில் இந்தியா: வாய்ப்புகளும், சவால்களும்' என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில், டாடா குழும நிறுவனங்களின் தலைவரும், போர்ப்ஸ், டைம் உள்ளிட்ட பத்திரிகைகளால் புகழப்பட்டவருமான ரத்தன் டாடா பங்கேற்றுப் பேசினார்.
அவர் கூறுகையில், 'இந்தியாவில் முதன் முதலாக விமான சேவை (ஏர் இந்தியா) துவங்கியது டாடா நிறுவனம்தான். அந்த நிறுவனம் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, மீண்டும் அந்த துறையில் நுழைய முயன்ற டாடாவுக்கு தோல்விதான் கிடைத்தது.
மீண்டும் புதிதாக விமான சேவையை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து துவக்க மூன்று முறை முயன்றோம். இது தொடர்பாக மூன்று பிரதமர்களைச் சந்தித்தேன். ஆனால், தனி நபர்களின் குறுக்கீடு காரணமாக என் முயற்சி பலனளிக்காமல் போய்விட்டது.
விமான சேவை துவக்க, என்னிடம் ஒரு அமைச்சர் 15 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார். இது பற்றி கேள்விப்பட்ட எனது சக தொழிலதிபர் ஒருவர் என்னிடம், 'வேலை ஆகணும்னா கொடுத்துட்டுப் போக வேண்டியதுதானே. உங்ககிட்ட இல்லாத பணமா?' என்று கேட்டார்.
நான் அவரிடம், “எனக்கு லஞ்சம் கொடுக்க விருப்பமில்லை. மேலும், 15 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துதான் விமான சேவை துவக்க வேண்டிய நிலையில் நான் இல்லை," என கூறிவிட்டேன்…" என்றவர், லஞ்சம் கேட்ட அமைச்சரின் பெயரை மட்டும் சொல்லவில்லை.
நாடு விடுதலையடையும் முன்பே, கடந்த 1930ம் ஆண்டு, 'டாடா ஏர் சர்வீசஸ்' என்ற பெயரில் இந்தியாவில் வர்த்தக ரீதியாக விமான சேவை நடத்திய முதல் தனியார் நிறுவனம் டாடாதான். அதுவே பின்னர் ஏர் இந்தியாவாக மாறியது. 1950களி்ல் அரசின் வசமானது.
யார் அந்த அமைச்சர்?
ரத்தன் டாடாவின் குற்றச்சாட்டு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புகார் குறித்து, 1996ம் ஆண்டில் தேவகவுடா தலைமையிலான அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த இப்ராகிமிடம் கேட்டபோது, , "நாட்டு நலன் கருதியே டாடா விமானப் போக்குவரத்துக்கு அன்றைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை இந்தியாவின் உள்நாட்டு விமான சேவையில் நுழைக்க முயன்றார். ஐரோப்பாவில் கூட வெளிநாட்டு விமான நிறுவனங்கள் உள்நாட்டு சேவையில் ஈடுபட அனுமதியில்லை.
இதனால், டாடாவின் அந்தத் திட்டத்துக்கு அனுமதி மறுத்தேன். நீங்களே உள்நாட்டு சேவையைத் தொடங்குங்கள்.. ஏன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸை அழைத்து வருகிறீர்கள் என்று அவரிடமே கேட்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு திட்டத்தை கைவிட்டார்.
ரத்தன் டாடா, தன்னிடம் லஞ்சம் கேட்ட அமைச்சர் யார் என்பதை தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், நான் தற்கொலை செய்து கொள்வேன்..", என்றார்.
இதனால் டாடாவிடம் லஞ்சம் கேட்டவர்கள் பாஜக ஆட்சியில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த மறைந்த பிரமோத் மகாஜனா அல்லது அடு்த்து அந்தத் துறைக்கு அமைச்சரான ஷரத் யாதவா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந் நிலையில் தன்னிடம் எந்த அமைச்சரும் லஞ்சம் கேட்கவில்லை என்று டாடாவும் பல்டி அடித்துள்ளார்.