ஸ்பெக்ட்ரம்: பிரதமர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?-உச்சநீதிமன்றம் கேள்வி
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சராக இருந்த ராசா மீது வழக்குத் தொடர, தனக்கு அனுமதி அளிக்குமாறு பிரதமருக்கு உத்தரவிடக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி சாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளிக்க பிரதமர் ஏன் 15 மாதங்கள் எடுத்துக் கொண்டார் என்று உச்ச நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியது.
மேலும் இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய 11 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன் என்றும் மத்திய அரசின் வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நீதிபதிகள் சிங்வி, கங்குலி அடங்கிய பெஞ்ச் இன்று இந்தக் கேள்விகளை எழுப்பியது.
மேலும் இந்த மனுவுக்கு பிரதமர் அலுவலகத்தின் விளக்கத்தைக் கோரிய நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
அனில் அம்பானிக்கு சாதகமாக ராசா:
நீதிபதி சிங்வி கூறுகையில், இந்த விவகாரத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனு பொத்தம் பொதுவானதல்ல. அதில் சில குறிப்பிட்ட விஷயங்களை சாமி சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக ராசா நடந்து கொண்டதும் தெரிய வருகிறது. இதில் அனில் அம்பானியின் கைவரிசையும் இருந்துள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், இப்போது ராசா ராஜினாமா செய்துவிட்டதால் அவர் மீது வழக்குத் தொடர சாமிக்கு பிரதமரின் அனுமதி தேவையில்லை என்றார்.
இந் நிலையில், ராசா மீது அடுத்த 10 நாட்களில் வழக்குத் தொடரப் போவதாக சாமி அறிவித்துள்ளார்.
மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணத்தை பலரும் பங்கு போட்டுள்ளதாகவும், இந்த விஷயத்தில் பிரதமர் நிறைய பதில்களை சொல்ல வேண்டி இருப்பதாகவும் சாமி கூறியுள்ளார்.
2008ம் ஆண்டிலேயே பிரதமருக்கு இந்த ஊழல் குறித்து தெரியும். இதனால் ராசா மீது நடவடிக்கை எடுக்குமாறு அப்போதிலிருந்தே நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் சாமி.