எங்கள் கட்சியின் தீர்மானம் குறித்து கருணாநிதி கவலைப்பட தகுதி இல்லை-சிபிஎம்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து முதல்வர் கருணாநிதி கவலைப்படுவது ஏன். இதுகுறித்து கருத்துக் கூற கருணாநிதிக்கு தகுதி கிடையாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தது குறித்து சிபிஎம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ஜெயலலிதாவின் பேச்சு மக்கள் நலனுக்கு உகந்ததல்ல என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதாவை கண்டிப்பது என்பதை விட திமுகவையும், மத்திய அரசையும் சாடவே சிபிஎம் தீர்மானம் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்று கூறியிருந்தார்.
முதல்வரின் கருத்துக்கு ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க தயார் என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதை தெரிவிக்க அவருக்கு தகுதியில்லை. தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து இப்போது நாங்கள் சிந்திக்கவில்லை. தற்போது மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி கூட்டு இயக்கங்களை நடத்துவதில் தான் கவனம் செலுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.