மே மாதம் தமிழகத்துக்கு விடிவு காலம் பிறக்கும்: வைகோ
திருப்பூர்: வரும் மே மாதத்தில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தமிழகத்துக்கு விடிவு காலம் பிறக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
திருப்பூரில் நடந்த திருமண விழாவில் பேசிய அவர், தமிழக மக்கள் உயிர் பயத்தில் இருக்கின்றனர். காரணம், தொடரும் குழந்தைகள் கடத்தல். பள்ளி சென்ற குழந்தை வீடு திரும்பி வருமா, பணிக்கு சென்ற கணவர் இரவுக்குள் வீட்டுக்கு வந்து விடுவாரா, கடைக்கு சென்ற மனைவி திரும்புவாளா என்ற பயம். மக்கள் அச்சம் கலந்த வாழ்க்கை வாழ்கின்றனர்.
ஈழத் தமிழனத்தை அழித்த பெருமை இந்திய சர்வாதிகார நிர்வாகத்துக்கே சேரும்.
தொழிலாளர் ஒற்றுமையால் நெய்வேலி, ஸ்டெர்லைட் ஆலை நச்சுத்தன்மை என பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டோம். நூல் விலையை குறைப்போம், பஞ்சு ஏற்றுமதியை தடுப்போம் என்று மத்திய அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.
அதிமுகவுடன் நிலையான, வலுசேர்க்கும் கூட்டணியாக மதிமுக இருக்கும். அடுத்த ஆண்டு மே மாதம், தமிழகம் ஒரு பெரிய மாற்றத்தை காணப் போகிறது. அதன் பிறகு தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கும் என்றார்.
காங்கிரஸ் கூட்டணிக்கு அதிமுக முயல்வது குறித்தோ, காங்கிரசுக்கு ஆதரவளிக்கத் தயார் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தது குறித்தோ வைகோ இதுவரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications