மீண்டும் அதிபராக பதவி ஏற்றார் ராஜபக்சே-மாணவர்கள் கட்டாய அட்டெண்டன்ஸ்!!
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் இரண்டாவது முறையாக அதிபர் ராஜபக்சே போட்டியிட்டார். இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா இவரை எதிர்த்து போட்டியிட்டார்.
இத்தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றார். தோல்வியுற்ற சரத்பொன்சேகா பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்து சிறையிடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக இலங்கையின் அதிபராக ராஜபக்சே பதவி ஏற்றுக்கொண்டார். தேர்தல் நடந்தபோது ராஜபக்சேவின் முதலாவது அதிபர் பதவிக்காலம் முடியாமல் இருந்தது. இதனால் வெற்றி பெற்றாலும் கூட அவர் 2வது முறையாக பதவி ஏற்க முடியாத நிலை இருந்தது.
தற்போது முதலாவது பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து 2வது அதிபர் பதவிக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. பதவி ஏற்பு நிகழ்ச்சி அதிபர் அலுவலகத்திற்கு வெளியே நடந்தது.
இன்று காலை 10.45க்கு இந்த விழா நடந்தது. பாதுகாப்பு பணியில் 11 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
பள்ளி மாணவ மாணவிகள் கட்டாயம் இந்த பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே ஆற்றும் உரையை கேட்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு அந்த உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பதவி ஏற்பு விழாவுக்காக கோலாகலமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. நகரெங்கும் அலங்கார பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. எங்கு பார்த்தாலும் ராஜபக்சேவின் பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள் இந்த பதவியேற்பு விழாவை புறக்கணித்தன. பதவியேற்பு விழா என்ற பெயரில் அரசுப் பணம் விரயமாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளன.
அடுத்த 6 ஆண்டுகளுக்கு இலங்கையின் அதிபராக ராஜபக்சே இருப்பார். மூன்றாவது முறையும் அவர் போட்டியிட வசதியாக சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.