மக்கள் நல்லவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்-ப.சிதம்பரம் அறிவுரை
காரைக்கால்: மக்கள் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த நல்லவர்கள் ஐந்தாண்டு காலம் முடிய நல்லவர்களாகவே இருக்க வேண்டும். அதே போல் வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் நாடு முன்னேற்றம் அடையும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவி்த்துள்ளார்.
காரைக்காலில் கடந்த 2004 ல் ஏற்பட்ட சுனாமியின் போது, இடிந்து விழுந்த அரலாறு பாலம் 7.09 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய பாலத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
சுனாமியால் இடிந்து விழுந்த இந்த இடத்தை நம்மாலும் கட்ட முடியும் என்பதை இந்த பாலம் எடுத்துக் காட்டுகிறது.
மக்கள் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நல்லவர்கள் ஐந்தாண்டு காலம் நல்லவர்களாக இருக்க வேண்டும். அதே போல் ஐந்தாண்டு காலம் வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் நாடு முன்னேற்றம் அடைய முடியும்.
ஒரு அரசு 5 ஆண்டு காலத்திற்கு தான் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆனால், அந்த 5 ஆண்டு காலத்திற்குள் பல வாக்குறுதிகளை தருகிறோம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றுகின்றோம். சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குள் தேர்தல் வந்து விடுகிறது. எனவே, மக்கள் நிறை குறைகளை சீர்தூக்கி பார்த்து நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்.
உதாரணமாக, 2004 ல் சுனாமி ஏற்பட்டது. சுனாமி என்பது ஒரு பேரழிவு. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும். இந்த சுனாமிக்கு முந்தைய சுனாமி வந்ததற்கு வரலாற்று குறிப்பு இல்லை. ஆனால் இலக்கிய குறிப்பு உள்ளது.
அந்தமானில் சில பணிகள் முடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. அது விரைவில் முடிக்கப்படும். நம்மால் முடியாதது எதுவும் கிடையாது. விண்ணிற்கு விமானத்தை அனுப்ப முடிகிறது. மூன்றாயிரம், நான்காயிரம் கிலோ மீட்டருக்கு ஏவுகணை அனுப்புகிறோம். கடலுக்கு அடியில் இருந்து காஸ் எடுத்து மக்களுக்கு கொடுக்க முடிகிறது. இப்படி விஞ்ஞானபூர்வமாக செய்ய முடியும் போது, சாலைகளை சரியாக போட முடியாதா, பள்ளி கட்டடங்களை ஒழுங்காக கட்ட முடியாதா, முடியும்.
எந்த பிரச்னையையும் அறிவுபூர்வமாக அணுகினால் அதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்றார்.