குடும்ப ஆட்சியிலிருந்து தமிழக மக்களை காக்க வேண்டும்-ஈவிகேஎஸ் இளங்கோவன்
கோபிச்செட்டிப்பாளையம்: தமிழகத்தில் குடும்ப ஆட்சியை நீடிக்க விடக்கூடாது. இதன் பிடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றியாக வேண்டும். இந்த நிலை நீடித்தால் தமிழகம் என்னவாகும் என நினைத்துப் பாருங்கள் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இளங்கோவன் பேசுகையில்,
காங்கிரஸ் கட்சியில் பல பேருக்கு திறமை இருந்தாலும் வாய்ப்புகள் இல்லாமல் போய் விடுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அத்தகைய ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்த நாம் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.
தமிழகத்தின் நிலைமை தற்போது மிகமோசமாக உள்ளது. வரும் தேர்தலில் எதையாவது செய்து ஆட்சியை பிடித்தே தீரவேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் மீண்டும் பரம்பரை ஆட்சி வந்து விடும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படுகின்றனர். நீயும் இதையே செய். ஜால்ரா போடு என்கின்றனர். நான் யாருக்கும் ஜால்ரா போடுகிறவன் இல்லை.
சத்துணவுடன் இலவச கல்வியை கொண்டு வந்தவர் காமராஜர். அந்த திட்டத்துக்காக பட்ஜெட்டில் அன்றைய காலகட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டால் பல்வேறு நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் குடும்ப ஆட்சியை நீடிக்க விடக்கூடாது. இதன் பிடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றியாக வேண்டும். இந்த நிலை நீடித்தால் தமிழகம் என்னவாகும் என நினைத்துப் பாருங்கள் என்றார்.