மேட்டூர் அணை நீர்மட்டம் 111 அடியைத் தொட்டது: ஒரு வாரத்தில் அணை நிரம்பும்
சேலம்: காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 111 அடியாக உயர்ந்தது. முழுக் கொள்ளலவான 120 அடியைத் தொட இன்னும் ஒரு வாரம் முதல் பத்து நாட்களாகும் என்று தெரிகிறது.
தமிழகம் மற்றும் கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து அணையின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 110.50 அடியாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி நீர்மட்டம் 111.42 அடியைத் தொட்டது. நேற்று அணைக்கு வினாடிக்கு 18,001 கன அடி நீர் வந்தது.
உள்ளூர் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணையின் நீர் வரத்து சீராக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் தினமும் 1 அடி உயர்ந்த வண்ணம் இருப்பதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
நீர் வரத்து இதே போன்று சீராக இருந்தால் அணை இன்னும் 7 முதல் 10 நாட்களுக்குள் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து நேற்று பாசனத்திற்காக வினாடிக்கு 2,226 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் அது மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. டெல்டா பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளதையடுத்து அணையில் இருந்து நீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினர் மேலும் தெரிவித்தனர்.