நாளை பீகாரில் வாக்கு எண்ணிக்கை-மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா நிதீஷ் குமார்?
பீகார் மாநில சட்டசபையில் உளஅள 243 தொகுதிகளுக்கும் 6 கட்டமாக தேர்தல் நடந்தது. பெருமளவிலான வன்முறைகள் இல்லாமல் இந்த தேர்தல் நடந்தது வியப்பளிக்கும் வகையில் அமைந்தது. மேலும் மாவோயிஸ்ட் நக்சலைட்கள் மிரட்டலை மக்கள் புறக்கணித்து விட்டனர். தேர்தல் முடிந்த அடுத்த நாள் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் மட்டுமே இந்த தேர்தலையொட்டி நடந்த மிகப் பெரிய வன்முறைச் செயலாகும்.
இந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இத்தோடு சேர்த்து பங்கா நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலுக்கான வாக்குகளும் எண்ணப்படும்.
மொத்தம் 42 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இங்கெல்லாம் புற ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குகள் பதிவாகியுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்த்த தேர்தலில் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி ரகோபூர், சோனேபூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலில் நிதீஷ் குமார்-பாஜக கூட்டணியே மீண்டும் பெரும் வெற்றி பெறும் என வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
ஆனால் இதை மீறி நாங்கள் வெற்றி பெறுவோம் என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பெரிய அளவில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. 2வது இடத்தைப் பிடித்தாலே அதற்கு பெரிய வெற்றி என்ற நிலைதான்.
இத்தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் - பாஜக ஒரு கூட்டணியாகவும், லாலு -பாஸ்வான் தனி அணியாகவும் போட்டியிட்டன. காங்கிரஸ் யாருடனும் சேராமல் தனியாக நின்றது.