ஆந்திர முதல்வர் ரோசய்யா ராஜினாமா-அடுத்த முதல்வர் கிரண்குமார் ரெட்டி?

கடந்த 2009ம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டி பலியானதையடுத்து முதல்வராகப் பதவியேற்றார் ரோசய்யா.
ஆனால், முதல்வர் பதவியைப் பிடிக்க முயன்று வரும் ராஜசேகர ரெட்டியின் மகனும் எம்பியுமான ஜெகன்மோகன் ரெட்டி ரோசய்யாவுக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் ரோசய்யாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெலுங்கானா விவகாரம் ஒரு பக்கம், இன்னொரு புறம் ஜெகன்மோகன் ரெட்டியின் டார்ச்சர் என தொல்லைக்குள்ளாகி வந்தார் ரோசய்யா. இந் நிலையில் இரு தினங்களுக்கு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ரோசய்யாவுக்கு எதிராக ரெட்டியின் ஆதரவாளர்கள் கலாட்டாவில் ஈடுபட்டனர். பதவி விலகக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.
ரெட்டியை கட்டுப்படுத்தும் நிலையில் காங்கிரஸ் தலைமையும் இல்லை. அவர் மீது நடவடிக்கை எடுத்தால் கட்சியை உடைத்து ஆட்சியைக் கவிழ்ப்பார், தனிக் கட்சி தொடங்கி காங்கிரசுக்கு பிரச்சனை தருவார் என்ற அச்சம் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்க சோனியா தயங்கி வருகிறார்.
தனக்கு தலைமையின் ஆதரவும் கிடைக்காததால் மிகவும் வெறுத்துப் போன ரோசய்யா, இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டார்.
உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து சபாநாயகர் கிரண் குமார் ரெட்டியை அடுத்த முதல்வராக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
ரெட்டி சமூகத்தினரின் ஆதரவைப் பெற்ற இவரால் தான் ஜெகன்மோகன் ரெட்டியை சமாளிக்க முடியும் என சோனியா கருதுவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications