திரும்ப தருவதாகக் கூறிவிட்டு அரசு நிலத்தை விற்று ரூ. 20 கோடி பெற்ற எதியூரப்பா குடும்பம்
ரூ. 500 கோடி மதிப்பிலான அரசு நிலங்களை சில லட்சம் ரூபாய்க்கு தனது மகன்கள், மகள், தங்கச்சி, தங்கச்சி மருமகன் ஆகியோருக்கு எதியூரப்பா, தான் துணை முதல்வராக (அப்போது முதல்வர் குமாரசாமி) இருந்தபோது விற்று விட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்த சர்ச்சையால் அவரது பதவிக்கும் ஆபத்து வந்தது. ஆனால் பாஜக தலைமையை பிளாக்மெயில் செய்து பதவியை காப்பாற்றிக் கொண்டு விட்டார் எதியூரப்பா.
இந் நிலையில், தனது குடும்பத்தினர் பெற்ற நிலங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டு விடும் என்று கூறியிருந்தார் எதியூரப்பா. அதன்படி அவை ஒப்படைக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.
ஆனால் அதில் 2 நிலங்களை மட்டும் ஒப்படைக்காமல் ஒரு சுரங்க நிறுவனத்திடம் விற்று ரூ. 20 கோடியை வாங்கி விட்டதாக தற்போது புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
எதியூரப்பாவின் மகன்கள் இருவரும், பெங்களூரில் இரு நிலங்களை வாங்கினார்கள். ஒவ்வெரு நிலமும் 21 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. ரூ.40 லட்சம் கொடுத்து நிலம் வாங்கப்பட்டது.
அப்போது இந்த நிலம் பெங்களூர் நகர வளர்ச்சி குழும கட்டுப்பாட்டில் இருந்தது. இதை முன்னாள் அமைச்சர் கிருஷ்ணய்யா ஷெட்டி, எதியூரப்பா மகன்களுக்கு சட்ட விரோதமாக விற்றார். ரூ.40 லட்சம் கொடுத்து அதை வாங்கினார்கள்.
ஒரு நிலம் இளைய மகன் விஜயேந்திரா, மருமகன் சோகன்குமார் பெயர்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. மற்றொரு நிலம் மூத்த மகன் ராகவேந்திரா பெயரில் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலங்களைத்தான் தற்போது அரசிடம் திருப்பித் தராமல், நைஸாக, கடந்த 22ம் தேதி சுரங்க நிறுவனம் ஒன்றுக்கு ரூ.20 கோடிக்கு விற்றுள்ளனராம். இதற்கான பத்திரப்பதிவும் அவசர கோலத்தில் நடந்துள்ளது.
இந்த சர்ச்சை பெரிதாக வெடித்தாலும் எதியூரப்பா நிச்சயம் பதவி விலக மாட்டார் என்றே தெரிகிறது.