நெல்லை, குமரியை மதுரை ரயில்வே கோட்டத்துடன் இணைக்க கோரிக்கை
நெல்லை: திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் உள்ள கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.
திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்கள், வளர்ச்சிப் பணிகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
திருவனந்தபுரம் கோட்டத்திற்கு 650கிமீ தூரத்திற்கு வழித்தடங்கள் உள்ளன. இதில் 25 சதவிகிதம் அதாவது கன்னியாகுமரி-திருவனந்தபுரம் 87 கிமீ மற்றும் நாகர்கோவில்-திருநெல்வேலி 74 கிமீ தூரம் உள்ள மொத்தம் 161 கிமீ தூரம் திருவனந்தபுரத்தின் கட்டுபாட்டில் உள்ளது.
திருவனந்தபுரத்தில் ரயில்களை நிறுத்தி பராமரிக்க முடியவில்லை என்பதற்காக திருநெல்வேலியும், நாகர்கோவிலும் ரயில்வே ஸ்டாண்டாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் வழியாக செல்லும் புதிய ரயில்களை இங்கிருந்து இயக்க முடியாத நிலை உள்ளது. திருவனந்தபுரம் கோட்டம் என்பதால் குமரி மற்றும் நெல்லை மாவட்ட ஸ்டேஷன்களில் மலையாளிகளுக்கே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திலேயே தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். நாகர்கோவில்-பெங்களூர் இடையே மதுரை வழியாக தினசரி ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க குமரி, மற்றும் நெல்லை மாவட்டங்களை மதுரை ரயில்வே கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே சங்கம தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளது.