பிளாக்பெர்ரிக்குத் தடை இல்லை! - இந்தியா 'உறுதி'
பாதுகாப்பு காரணங்களுக்காக ப்ளாக்பெர்ரியின் பல்க் மெயில் சர்வீஸ் உள்ளிட்ட பல வசதிகளையும் உள் நுழைந்து இடைமறித்துப் பார்க்கும் வசதியை இந்திய அரசு கேட்டிருந்தது. ஆனால் பல்க் மெயிலில் தலையிடுவது என்பது பெரிய நிறுவனங்களின் ரகசியத் தன்மையைக் கேள்விக்குறியாக்கிவிடும் என்பதால், அதற்கான ரகசிய குறியீட்டையோ தொழில்நுட்ப தகவல்களையோ தர மறுத்தது ப்ளாக்பெர்ரி.
இதனால் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியே ப்ளாக்பெர்ரியைத் தடை செய்யப் போவதாக இந்தியா அறிவித்திருந்தது. உலகிலேயே அதிக ப்ளாக்பெர்ரி போன்கள் விற்பனையாவது இந்தியாவில்தான் (2 மில்லியன்) என்பதால், இந்தியாவின் இந்த எச்சரிக்கைக்கு ரிசர்ச் இன் மோஷன் நிறுவனம் பணிந்துவிடும் என்றே பலரும் எதிர்ப்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு...
இந்தியா தனது கெடுவை நீட்டிக்க ஆரம்பித்தது. ரிசர்ச் இன் மோஷன் நிறுவனமோ, இதோ அதோ என சாக்குப் போக்குகளைக் கூறி வந்தது. இதுவரை, ப்ளாக்பெர்ரி சர்வீஸின் எந்த வசதியையும் இந்தியாவில் இடைமறித்துக் கேட்க முடியாத நிலையே நீட்டிக்கிறது. அதுமட்டுமல்ல... அமெரிக்காவில் இதற்கென தனி சட்டம் உள்ளது. ஆனால் இந்தியாவில் அப்படி எதுவும் கிடையாது. எனவே இதற்கான இறுதி வரைவை இந்தியா தயார் செய்துவிட்டு, எங்களிடம் கேட்கட்டும். அதுவரை எங்கள் சேவையை இடைமறிக்கவோ தடுக்கவோ சட்டப்பட்டி உரிமையில்லை என்றும் கூறிவிட்டது ரிசர்ச் இன் மோஷன்.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ராபர் இ க்ரெவ் கூறுகையில், "எந்த அளவு இடைமறிப்பு வசதியை அளிப்பது என்பது குறித்து இந்திய அரசுடன் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். இறுதித் தீர்வை எட்டும் வரை ப்ளாக்பெர்ரி சர்வீஸுக்கு எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என இந்திய மத்திய அரசு உறுதி அளித்துள்ளது", என்றார்.
ஏற்கெனவே பாதுகாப்பு காரணங்களுக்காக ப்ளாக்பெர்ரியின் அனைத்து தகவல்களையும் இடைமறித்துக் கேட்கும் வசதியை அளிக்க மறுத்ததற்காக வளைகுடா நாடுகளில் ப்ளாக்பெர்ரி தடை செய்யப்பட்டது. சவுதி அரேபியா, ஐக்கிய அரசு எமிரேட்டுகளில் ப்ளாக்பெர்ரி தடைசெய்யப்பட்டுள்ளது. குவைத்தும் தடை செய்யப் போவதாக எச்சரித்ததும், உடனடியாக அந்நாட்டுக்கு ப்ளாக்பெர்ரி சேவைகளை இடைமறிக்கும் வசதியை மறுபேச்சின்றி வழங்கியது ரிசர்ச் இன் மோஷன் நிறுவனம்.
அமெரிக்காவில், இதற்கென தனி சட்டமே உள்ளது. அதற்கு உட்பட்டுத்தான் பிளாக்பெர்ரி இயங்கியாக வேண்டும்.
சீனாவில் இடைமறிப்பு வசதியைத் தராவிட்டால் ப்ளாக்பெர்ரி சேவைக்கே அனுமதி இல்லை என்று முதலிலேயே கூறப்பட்டது. சீனாவில் ப்ளாக்பெர்ரி தயாரிக்கக் கூட இடம் உண்டு, ஆனால் விற்க அனுமதியில்லை என்று முதலில் கூறப்பட்டது. எனவே சீனைவின் நெட்வொர்க்குக்குள்ளேயே சேவையைத் தொடங்கியது ப்ளாக்பெர்ரி. சைனா மொபைல் நெட்வொர்க்குடன் இணைந்துதான் இப்போது ப்ளாக்பெர்ரி சேவை தொடர்கிறது. அப்படியும் கூட மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் அங்கே பிளாக்பெர்ரி விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலையில்தான் அங்கே முதல் ப்ளாக்பெர்ரி ஷோரூமே திறக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆனால் இந்தியாவில் மட்டும் ஜரூராக நடக்கிறது பேரம், நாட்டின் பாதுகாப்பு விஷயத்திலும்!