நிதிஷ் குமார் கூட்டணிக்கு 4ல் 3 பங்கு மெஜாரிட்டி கிடைத்தது
பாட்னா: நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணிக்கு பீகார் சட்டசபையில் நான்கில் மூன்று பங்கு மெஜாரிட்டி கிடைத்துள்ளது. அக்கூட்டணிக்கு 206 இடங்களில் வெற்றி கிடைத்தது.
இதில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 115 இடங்கள் கிடைத்துள்ளன. இக்கட்சி 141 தொகுதிகளில் போட்டியிட்டது. பாஜகவுக்கு 91 இடங்கள் கிடைத்தன. இக்கட்சி மொத்தம் 102 இடங்களில் போட்டியிட்டது. கடந்த 2005 தேர்தலில் 143 இடங்களை மட்டுமே இக்கூட்டணி பெற்றிருந்தது.
லாலு பிரசாத் யாதவ்-ராம் விலாஸ் பாஸ்வான் கூட்டணிக்கு வெறும் 25 இடங்களே கிடைத்துள்ளன. இதில் லாலு கட்சிக்கு 22 இடங்களும், பாஸ்வான் கட்சிக்கு 3 இடங்களும் கிடைத்தன. கடந்த தேர்தலில் இக்கூட்ணி 64 இடங்களை வென்றது நினைவிருக்கலாம்.
காங்கிரஸ் கட்சி வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. கடந்த தேர்தலில் இக்கட்சி 9 இடங்களில் வென்றிருந்தது.
சிபிஐ, சிபிஎம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியோர் தலா ஒரு இடங்களில் வென்றனர். மற்றவர்களில் 5 வெற்றி பெற்றனர்.
தேர்தலில் மொத்தம் 25 அமைச்சர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 20 பேர் வெற்றி பெற்றனர். 5 பேர் தோல்வியடைந்தனர். வெற்றி பெற்ற 20 பேரில் 13 பேர் ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர். மற்றவர்கள் பாஜகவினர்.