டெல்லியில் பிபிஓ ஊழியையை கற்பழித்த 4 பேர்: போலீசார் வலைவீச்சு
டெல்லி: 30 வயதுடைய பிபிஓ ஊழியையை 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அந்தக் கும்பலை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
சமீபகத்தில்தான் காரிலேயே வைத்து ஒரு பிபிஓ ஊழியை கற்பழிக்கப்பட்டார். இந்தநிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது டெல்லியை அதிர வைத்துள்ளது.
மணிபூரைச் சேரந்த பெண் ஒருவர் டெல்லியில் உள்ள தௌலா கான் பகுதியில் தங்கி பிபிஓவில் பணியாற்றி வருகிறார். இவர் இப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாகத் தங்கியுள்ளார்.
நேற்று பணி முடிந்து அவரும், அவரது தோழியும் நிறுவன வாகனத்தில் வந்து அதிகாலை 1.21 மணி அளவில் தௌலா கான் பகுதியில் இறங்கியுள்ளனர். நானக்புரா குருத்வாரா அருகில் வந்து கொணடிருக்கையில் குடிபோதையில் இருந்த 4 பேர் அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக ஒரு டெம்போ வண்டியில் ஏற்ற முயன்றனர். இதில் உடனிருந்த தோழி தப்பிவிட்டார்.
சிக்கியரை அவர்கள் 4 பேரும் சேர்ந்து சுமார் 40 நிமிடம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவரை மங்கோல்புரி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் அருகில் போட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இதற்கிடையே தப்பிச் சென்ற அவரது தோழி இது குறித்து போலீசுக்குத் தகவல் கொடுத்தார். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே பாதி மயக்கத்தில் இருந்த அவர் தனது தோழியை செல்போன் மூலம் அழைத்து தன் இருப்பிடத்தைப் பற்றி கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொடுத்த தகவலின்படி அந்த 4 பேர் கூலித் தொழிலாளர்களாக இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எனவே, கடந்த 24 மணி நேரத்தில் எந்தெந்தப் பகுதிகளில் சரக்கு இறக்குமதி நடந்திருக்கிறது என்று அவர்கள் விசாரித்து வருகின்றனர். மேலும், அந்தப் பெண்ணின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.