மழையால் ரூ.40 கோடி ரப்பர் உற்பத்தி பாதிப்பு: 50 ஆயிரம் பேர் வேலை இழப்பு
மார்த்தாண்டம்: குமரியில் பெய்து வரும் கனமழையால் ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் 62.5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 100 டன் வரை ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ரப்பர் உற்பத்தி அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு முடங்கியுள்ளது.
தற்போது முதல் தர ரப்பர் கிலோ ரூ. 200க்கும், 2-ம் தர ரப்பர் கிலோ ரூ. 183க்கும் விற்கப்படுகிறது. ஒட்டுக்கரை ரப்பர் கிலோ ரூ.130 முதல் 140 வரை விற்கப்படுகிறது.
பெரிய எஸ்டேட்டுகளில் மழை காலங்களில் பால் வடிக்க வசதியாக மரங்களில் சிறிய பிளாஸ்டிக் குடைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இவை கனமழைக்கு தாக்குபிடிப்பதில்லை. இதனால் தற்போது அங்கும் ரப்பர் பால் வடிப்பது முடங்கியுள்ளது. இதனால் ரூ. 40 கோடி வரை ரப்பர் வர்த்தகம் முடியங்கியுள்ளது. இதையடுத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.