ரியல் எஸ்டேட் ஊழல்: கோடிகளில் லஞ்சம்-பல ஆயிரம் கோடிகளில் கடன்-சி்க்கிய மணி மேட்டர்ஸ்!

லவசா, டிபி ரியாலிட்டி உள்ளிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும், சுஸ்லான் போன்ற காற்றாலை மின் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கில் முறைகேடாக கடன் வழங்க பெரும்ளவில் லஞ்சம் வாங்கி ஊழலில் ஈடுபட்ட எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராமச்சந்திரன் நாயர், எல்ஐசியின் முதலீடுகள் பிரிவுச் செயலாளர் நரேஷ் சோப்தா, பேங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர் தயாள், சென்ட்ரல் பேங்க் ஆப் இநதியாவின் இயக்குனர் மணிந்தர் சிங் ஜோகர் உள்ளிட்ட 8 மூத்த அதிகாரிகளை சிபிஐ நேற்று கைது செய்தது.
மேலும் இந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் இந்த அதிகாரிகளுக்கும் இடையே இடைத் தரகர்களாக செயல்பட்ட மணி மேட்டர்ஸ் நிதி நிறுவனத்தின் சிஇஓ ராஜேஷ் சர்மா மற்றும் அதன் இன்னொரு அதிகாரியையும் சிபிஐ கைது செய்துள்ளது.
முறைகேடாக கடன் பெறுவதற்காக லவசா, டிபி ரியாலிட்டி, சுஸ்லான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் இந்த வங்கிகள், எலஐசி அதிகாரிகளுக்கும் இடையே இடைத் தரகர்களாக செயல்பட்டுள்ளது மணி மேட்டர்ஸ்.
இதற்காக இந்த நிறுவனங்கள் சார்பில் பல கோடிகளை லஞ்சமாக இந்த அதிகாரிகளுக்குத் தந்துள்ளது மணி மேட்டர்ஸ். அத்தோடு இந்த அதிகாரிகளுக்கு இலவசமாகவும், மிகக் குறைந்த விலையிலும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடமிருந்து வீடுகள், பிளாட்டுகளையும் பெற்றுத் தந்துள்ளது.
இவர்களுக்கு லஞ்சமாகவும் சொத்துக்களாகவும் பல கோடிகள் கைமாறியுள்ளன. அதற்குப் பலனாக இந்த நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் தரப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு பணம் கைமாறியது, ஊழலில் அளவு என்ன என்ற விவரததை சிபிஐ இன்னும் வெளியிடவில்லை.
தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளே ஆன இந்த மணி மேட்டர்ஸ் நிறுவனம் இதுவரை பல்லாயிரம் கோடி கடன்களை பல்வேறு நிறுவனங்களுக்கு அரசு வங்கிகளிடமிருந்து பெற்றுத் தந்துள்ளது. மணி மேட்டர்ஸ் நிறுவனத்தின் முக்கிய பதவிகளில் ஓய்வு பெற்ற அரசு வங்கிகளின் மூத்த அதிகாரிகள், எல்ஐசி அதிகாரிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்றாலும் தாங்கள் பதவியில் இருந்த வங்கிகளிடமிருந்து இவர்களால் பல ஆயிரம் கோடி கடனைத் திரட்டித் தர முடிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த ஊழல் விவகாரத்தை சிபிஐ ஏன் இப்போது வெளியே கொண்டு வந்தது என்பதில் சில சந்தேகங்கள் எழுகின்றன. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசு பெரும் நெருக்கடிக்கும் கெட்ட பெயருக்கும் உள்ளாகியிருக்கும் நிலையில மக்களையும் மீடியாக்களையும் திசை திருப்பவே இந்த ஊழலை இப்போது சிபிஐ மூலம் மத்திய அரசு வெட்டவெளிச்சமாக்கியுள்ளதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அதிதாரிகள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வரும் திங்கள்கிழமை வரை சிபிஐ காவலில் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் அவர்களிடம் சிபிஐ மேலும் விசாரணை நடத்தி இந்த ஊழலின் ஆழத்தைத் தொடும் என்று தெரிகிறது.
இந்த விவகாரத்தால் எல்ஐசி மற்றும் வங்கிகள் கடன் தருவதை நிறுத்தி வைக்கவோ அல்லது காலம் தாழ்த்தவோ வாய்ப்புள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் வீட்டுக் கடன்களுக்காக காத்திருக்கும் பொது மக்களுக்கும் பிரச்சனைகளும் காலதாமதங்களும் ஏற்படலாம் என்று தெரிகிறது.
மேலும் இந்த விவகாரம் வெளியில் வந்ததிலிருந்து அதில் தொடர்புடைய எல்ஐசி, வங்கிகள் மற்றும் தரகு நிறுவனமான மணி மேட்டர்ஸ் ஆகியவற்றின் பங்குகள் சந்தையில் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன.
இந் நிலையில் இந்த மோசடியில் தொடர்புடைய ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறையும் முடிவு செய்துள்ளது. இதில் ஏதாவது வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என்று ஆய்வு செய்யப்படவுள்ளது.
மேலும் கடன் பெற்ற இந்த நிறுவனங்களிடம் அது தொடர்பான முழு விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு சிபிஐயும் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications