பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு-ஜாதி விவரம் கேட்கப்படாது
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறது. கடைசியாக கடந்த 2001ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பத்து ஆண்டுகளுக்குப் பின் 2011ம் ஆண்டில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்தப் பணி பிப்ரவரி 9ம் தேதி
தொடங்குகிறது.
இடையில், வீட்டுப் பட்டியல் குறித்த விவரங்களை சேகரிக்கவும், தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிக்காகவும் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பில் வீடுகள், அதில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் போன்ற விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டன.
அடுத்தாண்டு பிப்ரவரியில் எடுக்கப்படும் கணக்கெடுப்பே முழுமையான கணக்கெடுப்பாக இருக்கும்.
இந்தக் கணக்கெடுப்பில் தனி நபர்களின் விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்படும். அதாவது, குடும்பத்தில் உள்ளவர்கள் எண்ணிக்கை, அவர்களது படிப்பு, தொழில், வருமான விவரம், திருமணம் ஆனவர்களா, குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களது கல்வித் தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கேட்கப்படும்.
இந்தக் கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்காக அவர்களுக்கு 3 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
கணக்கெடுப்பு முடிந்ததும் விடுபட்ட இடங்களில் இந்தப் பணி மார்ச் 1ம் தேதி 5ம் தேதி வரை நடக்கும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லை:
பிப்ரவரியில் நடத்தப்பட உள்ள கணக்கெடுப்பில் ஜாதி குறித்த விவரங்கள் கேட்கப்பட மாட்டாது.
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டிய நிலையில் மாநில அரசு உள்ளது. இந்தக் கணக்கெடுப்பை நடத்தி அதன் விவரங்களை பிற்பட்டோர் ஆணையத்திடம் தமிழகம் சமர்பி்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அடுத்தாண்டு நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதி வாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று தமிழக அரசு கூறி வருகிறது.
இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே தனியாக நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் தமிழக அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.