மும்பை தாக்குதல்-ஐஎஸ்ஐ, லஷ்கர் மீது அமெரிக்காவில் இஸ்ரேல் குழந்தையின் பாட்டி வழக்கு

யூத மத போதகரான (ரப்பி) ரப்பி கேவ்ரியேல் நோவா ஹோல்ட்ஸ்பர்க் மற்றும் அவரது மனைவி ரிவ்கா ஆகியோர் தங்களது குழந்தை மோஷேவுடன் மும்பையில் வசித்து வந்தனர்.
மும்பையில் நுழைந்த தீவிரவாதிகள், யூதர்கள் அதிகம் வசிக்கும் இடமான சபாத் லுபாவிட்ச் மையத்தை தாக்கியபோது அதில், சிக்கி மோஷேவின் பெற்றோர் உயிரிழந்தனர். அப்போது ரிவ்கா கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமெரிக்காவின் ப்ரூக்ளின் கோர்ட்டில் ரிவ்காவின் தாயார் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் ப்ரூக்ளின் நகரைச் சேர்ந்தவர் ஆவார். தற்போது இஸ்ரேலில் மோஷேவுடன் வசித்து வருகிறார்.
மோஷேவின் பாட்டி தொடர்ந்துள்ள வழக்கில், எனது மகளும், மருமகனும் உயிரிழக்கக் காரணமான லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி உள்ளிட்டவை கொடுத்து உதவியாக இருந்தது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புதான் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஐஎஸ்ஐ தலைவருக்கு கோர்ட் சம்மன்:
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ள ப்ரூக்ளின் கோர்ட், தற்போது ஐஎஸ்ஐ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது சுஜா பாஷா, லஷ்கர் இ தொய்பா தலைவர்கள் ஹபீஸ் சயீத், ஜாகியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அமெரிக்க அரசுக்குத் தொடர்பு இல்லை என்றும், இது தனிப்பட்ட வழக்கு என்றும் அமெரிக்க அரசுத் தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். அதேசமயம், இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்க தூதரகத்துடன் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ரகசியமாக தொடர்பு கொண்டு ஆலோசித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், பாகிஸ்தான் தூதரகத்திற்கு சம்மன் ஏதும் வந்துள்ளதா என்பது குறித்தும் தெரியவில்லை.
செப்டம்பர் 2008ம் ஆண்டு முதல் ஐஎஸ்ஐ தலைவராக உள்ளார் பாஷா. இவர் தவிர, 2007 செப்டம்பர் முதல் 2008 செப்டம்பர் வரை ஐஎஸ்ஐ இயக்குநராக இருந்த நதீம் தாஜ், ஐஎஸ்ஐ அதிகாரிகள் மேஜர் இக்பால், மேஜர் சமீர் அலி ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications