ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம், திராவிட முன்னேற்ற கழகம் என்கிற பெயரால் வளர்ந்த இந்த இயக்கத்திற்கு தேர்தலில் கிடைக்கின்ற வெற்றி மாத்திரம் முக்கியம் அல்ல, தமிழ் இனத்தினுடைய இன உணர்வை வலுப்படுத்துவது தான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது.

இதில் பொதுச்செயலாளர் அன்பழகன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென் மண்டல திமுக அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி, முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், எஸ்.பி.சற்குணபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி, அமைச்சர் கீதாஜீவன், முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, ஜெயதுரை எம்.பி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மற்றும் மாவடத்தின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்குபட்ட சட்டமன்ற தொகுதிகள் நிலவரம், திமுகவின் பலம்-பலவீனம் ஆகியவை நிர்வாகிகள் விளக்கினர். பின்னர் பேசிய முதல்வர் கருணாநிதி கூறுகையில்,

தூத்துக்குடி என்பது திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கோட்டைகளில் ஒன்று என்பதை நானும் அறிவேன், நீங்களும் அறிவீர்கள். தூத்துக்குடியில் எனக்கு ஒரு தனி கவனம் இருப்பதற்கு முக்கிய காரணமே, அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை 1949ம் ஆண்டு சென்னை ராபின்சன் பூங்காவிலே தொடங்கியபோது அதையொட்டி கழகத்தின் காவலர்களையெல்லாம் அதற்கடுத்த திங்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் சென்று திராவிட முன்னேற்ற கழகத்தின் இரு வண்ணக் கொடியை- புதிதாக அமைக்கப்பட்ட அந்த கொடியை ஏற்றி வைப்பதென்றும்- திமுக தொடங்கியதற்கான காரணத்தை ஆங்காங்கு விளக்க வேண்டுமென்றும் அறிவித்தார்.

அப்படி முதன் முதலாக என்னால் கொடியேற்றப்பட்ட இடம், தமிழகத்திலே தூத்துக்குடி தான். அதனால்தான் அப்படி ஏற்றி வைக்கப்பட்ட அந்த கொடி ஒரு அங்குலம் தாழ்ந்தால் கூட- என்னால் அந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியாது. எனவே தான் தூத்துக்குடியைப் பற்றி நான் சிறப்பான கவனம் செலுத்தி வருகிறேன்.

அங்கே ஏற்படுகின்ற மன மாச்சரியங்கள், புகைச்சல்கள், பூசல்கள் இவைகளுக்கு இடம் தராமல், கழகத்தை அங்கே எப்படி அமைதியாக, விறுவிறுப்பாக, சுறுசுறுப்பாக நடத்திச் செல்வது என்பதை பற்றி சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் மாவட்டந்தோறும் நடைபெறுகின்ற கூட்டங்களைவிட, தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக நடைபெறுகின்ற இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

நான் பல மாவட்ட நிர்வாகிகளின் கூட்டங்களில் பேசியதைப்போல, திமுக தேர்தலுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. அந்த அடிப்படை உண்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இயக்கம் திராவிட இன மேன்மைக்காக- திராவிடர்களின் சுயமரியாதை உணர்வை பாதுகாப்பதற்காக- திராவிட இயக்கத்தின் தன்மான கொள்கைகளை பரவ செய்வதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.

அதனால்தான் அரசியல் பக்கம் அடியெடுத்து வைக்காமல் சமுதாய அளவில் நம்மிடம் கட்டுப்பாடு இருந்தால் போதும் என்று தந்தை பெரியார் செயல்பட்டார். அதையேற்று அண்ணாவும், அண்ணாவை பின்பற்றி நாங்களும் சமுதாயம் வளர்ச்சிபெற இந்த கருத்துக்களையெல்லாம் மைதானங்களிலே பேசினால் மட்டும் போதாது, இந்த கருத்துக்களை சட்டமன்றங்களில், நாடாளுமன்றங்களில் பேசினால் தான் பயன் ஏற்படும் என்ற வகையில், அதற்கேற்ப தேர்தலில் ஈடுபடுவதென்று முடிவு செய்து, படிப்படியாக தேர்தலில் ஈடுபட தொடங்கினோம்.

அவ்வாறு தேர்தலில் ஈடுபட்டபோது, ஆட்சியை பிடிக்கிறோமோ இல்லையோ, ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பது நம்முடைய குறிக்கோளில் ஒன்று என்றாலும், சமுதாயப் பணிகளை நிறைவேற்ற ஆட்சியில் இருந்து தான் தீரவேண்டுமென்ற நிலை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், 1957ம் ஆண்டு முதன் முதலாக நான் குளித்தலை தொகுதியிலே நின்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபின்- அவையிலே தரப்பட்ட ஒரு கொள்கை குறிப்பில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

அந்தப் பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் 'இசை வேளாளர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நான் பேசும்போது அப்போது அவையிலே பெருந்தலைவர்கள் காமராஜர், கக்கன் உட்பட அனைவரும் இருந்தார்கள்.

நான் கூறினேன், அரசின் இந்த குறிப்பிலே 'இசை வேளாளர்' என்று 'ர்' விகுதி போடப்பட்டுள்ளது. ஆனால் மிகப்பெரிய சமுதாயங்களில் ஒன்றான நாடார் மற்றும் 'சாணார்' சமுதாயம் பற்றி இந்த புத்தகத்திலே 'சாணான்' என்று 'ன்' விகுதி போட்டு, அச்சடிக்கப்பட்டுள்ளதே, இது என்ன நியாயம் என்று கேட்டேன்.

உடனே முதல்வர் காமராஜர், அமைச்சர் கக்கனை திரும்பிப் பார்த்து 'என்ன?' என்று கேட்டார். உடனே அமைச்சர் கக்கன் எழுந்து, அது தவறு தான், அந்த தவறுக்காக வருந்துகிறேன், அந்த தவறு நாளைக்கே சரிசெய்யப்படும் என்று சொன்னார்.
நான் அங்கே அமர்ந்திருந்த காரணத்தால்தான் அன்றைக்கு 'சாணான்' என்ற பெயர் அந்த பட்டியலிலே 'நாடார்' அல்லது 'சாணார்' என்று மாற்றக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.

சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம், திராவிட முன்னேற்ற கழகம் என்கிற பெயரால் வளர்ந்த இந்த இயக்கத்திற்கு தேர்தலில் கிடைக்கின்ற வெற்றி மாத்திரம் முக்கியம் அல்ல, தமிழ் இனத்தினுடைய இன உணர்வை வலுப்படுத்துவது தான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட கழகத்தில் உள்ள நாம் இந்த இயக்கத்தை வளர்ப்பதற்கு ஒவ்வொருவரிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கழகம் ஒன்றே என்ற குறிக்கோளோடு நாம் பணியாற்றினால், நாம் ஒற்றுமையாக இருந்தால், ஒன்றுபட்டிருந்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது, வீழ்த்த முடியாது என்பதை நாம் நிரூபிக்க முடியும்.
தூத்துக்குடியில் நான் எதிர்பார்த்ததைப்போல சிறு சிறு சண்டைகள், குழுக்கள் இரண்டு மூன்று என்று இருந்தாலும், அவர்களுக்குள் தேவையற்ற பிரச்சனைகள் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க முடியாது.

மாவட்ட கழக செயலாளர் பெரியசாமி பற்றி உங்களுக்கு தெரியும். அவரைப்ப ற்றி அவருக்கும் தெரியும். அவர் கொள்கைப் பிடிப்பு உள்ளவர். கொள்கைகளை விலை கூறாதவர். கழகத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டுமென்று கருதுகிறவர்.
அதே நேரத்தில் அவருக்கு துணையாக, அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இந்த இயக்கத்திற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அது நாம் தேடிப்பெற்ற வெற்றி. நான் இருவரையும் இங்கே பாராட்டுகின்ற போது, இவரைவிட அதிகமாக அவரை பாராட்டி விட்டேன் என்று இவரும் கருதக்கூடாது, அவரை விட அதிகமாக இவரை பாராட்டி விட்டேன் என்று அவரும் கருதக்கூடாது.

அதனால் தான் நான் இருவரையும் சமமாக பாராட்டியிருக்கிறேன். பெரியசாமி நீண்ட காலமாக இந்த இயக்கத்தில் தொடர்ந்து இருப்பவராக இருக்கலாம். இடையில் வேறு சிலர் நமது இயக்கத்திலே வந்து இணையலாம்.

ஓடிக்கொண்டிருக்கின்ற ஆற்று வெள்ளத்தில், கிளை நதிகளின் தண்ணீரும் வந்து சேரும்போது இரண்டும் கலந்து ஒரே தண்ணீராக ஆவது போல பெரியசாமியும், அனிதாவும் சேர்ந்து ஜீவநதியாக இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும்.

அதைப்போலவே நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றிருக்கின்ற ஜெயதுரையும், அவரை வெற்றி பெற செய்ய மாவட்ட செயலாளர்களும், கழக தோழர்களும் எந்த அளவிற்கு பாடுபட்டார்கள் என்பதை மனதிலே கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு சிறு குறைபாடுகள் இருப்பதைக்கூட என்னால் தாங்கி கொள்ள முடியாது
என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+