பாரதியார் படித்த எட்டயபுரம் பள்ளியை அரசே ஏற்க சிபிஎம் கோரிக்கை
எட்டயபுரம்: மகாகவி பாரதியார் படித்த எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இராஜா மேல்நிலைப் பள்ளி நீண்ட வரலாறு கொண்ட பாரம்பரியமான அரசு உதவி பெறும் தனியார் பள்ளியாகும்.
இந்த பள்ளியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நாவலர் சோமசுந்தர பாரதியார் உள்பட பல அறிஞர்கள் கல்வி பயின்றுள்ளனர்.
இந்த பள்ளியையும் இதற்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தையும் விற்பனை செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றது.
இது குறித்து தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து தடுத்து நிறுத்துமாறும், பெருமைமிகு இப்பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்த முன்வருமாறும் கடிதம் மூலம் ஏற்னவே வலியுறுத்தி இருந்தோம். இந்த கோரிக்கையை தாங்கள் ஏற்று தடுத்து நிறுத்தியது வரவேற்கத்தக்கது.
தற்போது இப்பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்துவதற்கான மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கடிதம் மூலம் அனுப்பியுள்ளதாக அறிகிறோம்.
எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் உட்பட பல தரப்பட்ட மக்களின் குழந்தைகள் கல்வி பெறும் வகையில் இப்பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications