சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் தாலுகா அலுவலகம் முன் பஞ்சாயத்து துணை தலைவர் தற்கொலை
பூதப்பாண்டி: அதிகாரிகள் பலமுறை சாதிச் சான்றிதழ் மனுவை நிராகரித்ததால் மனமுடைந்த பஞ்சாயத்து துணை தலைவர் தாலுகா அலுவலகம் முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குமரி மாவட்டம் தாலக்குடி மீனமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கசாமி. தாலக்குடி பஞ்சாயத்து துணை தலைவராக இருந்து வந்தார். இவருக்கு ஒரு மகனு்ம், மகளும் உள்ளனர்.
தங்கசாமி தனது பிள்ளைகளின் படிப்புக்காக பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்தில் சாதிச் சான்றிதழ் வேண்டி பலமுறை மனு கொடுத்துள்ளார். ஆனால் அவரது மனுக்களை ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.
இந்நிலையில் நேற்று தனது மனு குறித்து விசாரிக்க வந்தவர் அவரது மனு நிராகரிக்கப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதனால் வெறுப்படைந்த அவர் தாலுகா அலுவலகம் முன் விஷமருந்திய நிலையில் மயங்கிக் கிடந்தார்.
உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவரது நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications