அடுத்த 72 மணி நேரத்தில் கன மழை-வானிலை மையம் தகவல்
சென்னை: காற்றழுத்த தாழ்வுநிலை இன்னும் அதே இடத்திலேயே இருப்பதால் அடுத்த 72 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து அங்கிருக்கும் ஏரி, குளங்கள் நிரம்பியும், உடைப்பு ஏற்பட்டும் வருகிறது.
இந்நிலையில் அடுத்த 72 மணி நேரத்திற்கும் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது,
இலங்கையையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்திலேயே உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும், அடுத்த 72 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். இது தவிர மற்ற இடங்களிலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றார் அவர்.